Lenin Raj / 2026 ஏப்ரல் 08 , பி.ப. 03:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

நிவாரணங்கள் வழங்குவதாக வாக்குறுதியளிக்கும் அரசாங்கம், அவை நடைமுறைக்குச் சாத்தியமானவையா என்பதைக் கற்றறிந்த பின்னரே அதனை அறிவிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைச் சுட்டிக்காட்டினார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது:
"தித்வா புயலின் போது தகரம் ஒன்றிற்கு 20 இலட்சம் ரூபாயும், காணி ஒன்றிற்கு 50 இலட்சம் ரூபாயும் தருவதாக வாக்குறுதியளிக்கப்பட்டது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு முன்னதாக நிவாரணப் பொதி வழங்கப்படும் என அறிவித்தார்கள். தற்போது தேர்தலும் முடிந்துவிட்டது, நிவாரணப் பொதியும் முடிந்துவிட்டது.
வரிகளை அடிப்படையாகக் கொண்டு நீங்கள் நாட்டு மக்களுக்குச் செய்த நன்மை என்ன? வரி மேல் வரி விதித்து நாட்டு மக்களை நடுத்தெருவில் கைவிட்டுள்ளீர்கள். தயவு செய்து நடைமுறைக்குச் சாத்தியமான விடயங்களை மட்டும் வாக்குறுதிகளாக வழங்குங்கள்.
உங்களது வரிக்கொள்கையினால் செல்வந்தர்கள் மாத்திரமே இலாபமடைகின்றனர்; சிறு முயற்சியாளர்களுக்கு இலாபமே இல்லை. அரிசி விலை 300 சதவீதத்தால் அதிகரிக்கும் போது, விவசாயிகளின் இலாபம் 100 சதவீதமாவது அதிகரித்திருந்தால் ஆறுதலடையலாம். ஆனால், அதுவும் நடக்கவில்லை. அரிசியை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யத் தேவையில்லை என்றீர்கள்; 2025-ஆம் ஆண்டுக்குப் பிறகு இறக்குமதி செய்யப்படாது என்றீர்கள். ஆனால், தற்போது அரிசியை இறக்குமதி செய்கின்றீர்கள்.
விவசாயம் அல்லது சிறு முயற்சியாளர்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்காமல், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரிவிலக்கு அளித்து, உள்நாட்டில் வரி மேல் வரி வசூலித்து மக்களைப் பாரிய சுமைக்குள் தள்ளியுள்ளீர்கள். இதுதான் கிராம அபிவிருத்திக்கான வரிக்கொள்கையா? யாரை ஏமாற்ற முயற்சிக்கின்றீர்கள்?
சில நிவாரணங்களை மே மாதம் முதல் வழங்கத் தயாராகி வருகின்றீர்கள். தமிழ் - சிங்களப் புத்தாண்டு காலத்தில் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பது உங்களுக்கு விருப்பம் இல்லையா? மத்திய கிழக்கு நெருக்கடி குறித்து முன்கூட்டியே எச்சரித்த போது, 'எங்களிடம் ஓகஸ்ட் மாதம் வரை எரிபொருள் கையிருப்பு உள்ளது' என்று அரசாங்கத் தரப்பில் கூறப்பட்டது. மக்களை நடுத்தெருவில் நிற்கவைத்து, பட்டினியில் தவிக்கவிட்டு, மின்சாரத்தைத் துண்டித்து மக்களின் வாக்குகளைப் பெற வேண்டிய அவசியம் இல்லை. அது உங்களது ஆளும் தரப்பு அரசியலாகும்.
நிலக்கரி விவகாரத்தில் ஜனாதிபதி முரணான கருத்துக்களை முன்வைக்கின்றார். விலைமனுக்கோரலில் பிரச்சினை இல்லை என்று ஒரு முறையும், பிரச்சினை உள்ளது என்று மறுமுறையும் கூறுகின்றார். நிலக்கரி ஊழலில் யாரும் 'சாப்பிடவில்லை' (பணம் ஈட்டவில்லை) என்றார். ஆனால், நிலக்கரியைக் கொள்வனவு செய்யும் போது இல்லாவிட்டாலும், அதற்கான கப்பல்கள் வரும்போது சிலர் நன்றாகவே 'சாப்பிட்டு' திருப்தியடைந்துள்ளனர் என்பது தெளிவாகப் புரிகிறது.
நீண்டகாலத் தாமதத்திற்குப் பின் நியமிக்கப்பட்ட கணக்காய்வாளரின் அறிக்கையைப் பார்த்தீர்களா? நிலக்கரி நிறுவனம் பதிவு செய்யப்படவில்லை என்றும், பரிசோதனை அறிக்கை தவறானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பதிவு செய்யப்படாத ஆய்வகத்திலிருந்து அறிக்கை பெறப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில், ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு வந்து நிலக்கரி ஊழலைப் பாதுகாக்க முயற்சிக்கின்றார். இறுதியில் அந்த நட்டத்தை மக்கள் மீதே சுமத்தியுள்ளனர்.
2025-ஆம் ஆண்டில் இந்த ஊழல் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க சுட்டிக்காட்டினார். நிலக்கரி ஊழலே எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டண உயர்வுக்கு நேரடி காரணமாக அமைந்தது. மார்ச் மாதம் நிர்ணயிக்கப்பட்ட ஊதியமே தற்போதும் நடைமுறையில் உள்ளது. அதன் பின்னர் பலமுறை எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன.
இந்த நட்டத்தை அரசப் பணியாளர்கள் எப்படித் தாங்குவார்கள்? பொருட்கள் விலை 300 சதவீதம் உயர்ந்துள்ள நிலையில், அரசுப் பணியாளர்களின் சம்பளத்தை உயர்த்த முடியுமா இல்லையா? தனியார் துறையினரின் ஊதியம் குறித்தும் சிறந்த தீர்மானம் எடுக்கப்பட வேண்டும்.
வெறுமனே வெற்றுப் பேச்சுகளைத் தவிர்த்துச் சரியான முடிவுகளை எடுங்கள். உர மானியம் வழங்குவதாகவும், நெல் கொள்வனவு செய்வதாகவும் கூறினீர்கள். அவை நடக்கின்றனவா? உங்களால் அதைச் செய்ய முடியாது. ஆளும் தரப்புக்கு நெருக்கமான சிலரைத் திருப்திப்படுத்திவிட்டு, பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கிவிட்டதாகக் கூற வேண்டாம். இந்த அரசாங்கத்தின் நடவடிக்கை, திருடியவனே 'திருடன் திருடன்' என கூச்சலிடுவதைப் போல அமைந்துள்ளது" என்றார்.
32 minute ago
45 minute ago
56 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
45 minute ago
56 minute ago
2 hours ago