2026 மார்ச் 22, ஞாயிற்றுக்கிழமை

நாட்டில் பதிவான முக்கிய சம்பவங்கள்

Editorial   / 2026 மார்ச் 22 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

01. மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்பு - பூநகரி பூநகரி, சென்மன்குண்டு பகுதியில் நேற்று (21) மாலை மின்சாரம் தாக்கி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 37 வயதுடைய அப்பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். தனது விவசாய நிலத்தை வனவிலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காக அவரே சட்டவிரோதமாக அமைத்திருந்த மின்சாரக் கம்பியில் தவறுதலாக மோதியதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பூநகரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

02. காட்டு யானை தாக்கி ஒருவர் பலி :  தியபெதும, கொதுருவாவ பகுதியில் நேற்று(21)  மாலை காட்டு யானை தாக்கியதில் 61 வயதுடைய அத்தனகடவலவைச் சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவர் மற்றொருவருடன் மோட்டார் சைக்கிளில் வயல் காவலுக்காகச் சென்று கொண்டிருந்த போதே இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

03. 'ஹாஷ்' (Hashish) போதைப்பொருளுடன் இளைஞன் கைது: கல்கிசை, படோவிட்ட பகுதியில் பொலிஸ் சோதனைச் சாவடி அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், ஒரு கிலோ 24 கிராம் 'ஹாஷ்' போதைப்பொருளுடன் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

04. சட்டவிரோத எரிபொருள் சேமிப்பு: இருவர் கைது - ராமநாதபுரம் மற்றும் ஹுங்கம எரிபொருள் தட்டுப்பாட்டைப் பயன்படுத்தி அனுமதியின்றி எரிபொருளைச் சேமித்து வைத்திருந்த இருவர் வெவ்வேறு பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்:

  • ராமநாதபுரம்: சின்னசந்திய பகுதியில் 1,220 லீற்றர் பெற்றோல் மற்றும் 530 லீற்றர் டீசலைச் சேமித்து வைத்திருந்த 24 வயதுடைய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
  • ஹுங்கம: மாமடல பகுதியில் 2,200 லீற்றர் டீசலை (11 பீப்பாய்கள்) வைத்திருந்த 80 வயதுடைய முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டு அம்பாந்தோட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

05. மசாஜ் நிலையத்தின் பெயரில் இயங்கிய விபச்சார விடுதி முற்றுகை: கந்தானை நகரில் மசாஜ் நிலையம்   என்ற பெயரில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றை பொலிஸார் முற்றுகையிட்டனர். இதன்போது விடுதி மேலாளர் மற்றும் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பலாங்கொடை, கொலம்பகேஆர மற்றும் ஆக்க​ரப்பத்தனை ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

06. ஆற்றில் ஆண் சடலம் மீட்பு :நெலுவ, மாதுகெட்ட பகுதியில் கிங் கங்கையின் கரையில் 65 வயதுடைய ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலம் பிரேத பரிசோதனைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

07. டிப்பர் வாகனம் மோதி முதியவர் உயிரிழப்பு: குருநாகல் - நீர்கொழும்பு வீதியில் புவக்கஸ் சந்தியில் நேற்று(21)  காலை இடம்பெற்ற விபத்தில் 63 வயதுடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார். பின்னால் வந்த டிப்பர் வாகனம் மோதியதாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. டிப்ளர் வாகனச் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .