Janu / 2026 மே 18 , பி.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீராடச் செல்லும் சந்தர்ப்பங்களில் மிகத் துரதிர்ஷ்டவசமான முறையில் பெறுமதியான மனித உயிர்கள் பலியாகும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளன. மக்களின் கவனக்குறைவு மற்றும் போதிய விழிப்புணர்வின்மையே இதற்குக் காரணமாக அமைந்துள்ளதால், இத்தகைய விபத்துகளைத் தவிர்ப்பது நம் அனைவரினதும் பொறுப்பாகும்.
நீரில் மூழ்கும் ஆபத்துகள் பெரும்பாலும் உடனடியாகவும் எதிர்பாராத விதமாகவும் ஏற்படுகின்றன. உயிரிழப்புகளுக்குக் காரணமாக அமையும் பிரதான காரணிகளையும், அவற்றைத் தவிர்ப்பதற்கான பாதுகாப்பு அறிவுறுத்தல்களையும் பொலிஸார் பின்வருமாறு பட்டியலிட்டுள்ளனர்:
1. இயற்கை மற்றும் சூழல் காரணிகள்
நீருக்கடியில் உள்ள ஆபத்துகள்: நீர்மட்டம் அமைதியாகத் தெரிந்தாலும், நீருக்கடியில் காணப்படும் பலமான நீரோட்டங்களில் சிக்கிக்கொள்ளுதல், சேறு, பாசி படிந்த வழுக்கும் பாறைகள் மற்றும் மரக்கிளைகளில் சிக்கிக்கொள்ளும் அபாயம்.
திடீர் நீர்மட்ட உயர்வு: மலைப்பகுதிகளில் பெய்யும் பலத்த மழை காரணமாக, தாழ்நிலப்பகுதிகளில் உள்ள ஆறுகள் மற்றும் குளங்களின் நீர்மட்டம் திடீரென அதிகரிக்கக்கூடும்.
நீரின் ஆழம் குறித்த தவறான கணிப்பு: தெளிவான நீர் காரணமாக ஆழம் குறைவாகத் தெரிந்தாலும், எதிர்பாராத விதமாக ஆழமான பள்ளங்களில் விழும் வாய்ப்பு.
2. மனிதத் தவறுகள் மற்றும் கவனக்குறைவு
தன்னம்பிக்கை மிகுதி: தமக்கு நன்றாக நீந்தத் தெரியும் என்ற அதீத நம்பிக்கையில், பாதுகாப்பு எல்லைகளைத் தாண்டிச் செல்லுதல்.
மது அருந்துதல்: மதுபோதையில் நீராடுவதால் நரம்பு மண்டலத்தின் கட்டுப்பாடு சீர்குலைதல், உடல் விரைவில் களைப்படைதல் மற்றும் ஆபத்தை உணரும் திறன் குறைவடைதல்.
அறிமுகமில்லாத இடங்கள்: தமக்கு அறிமுகமில்லாத பகுதிகளில் நீராடச் செல்லும்போது, அவ்விடங்களின் ஆபத்தான தன்மை குறித்துப் போதிய அறிவு இல்லாமை.
3. உடல்நல பாதிப்புகள்
தசைப்பிடிப்பு (Cramp): நீரின் அதிக குளிர்ச்சி அல்லது அதிக சோர்வு காரணமாகத் தசைகள் விறைப்படைந்து, நீந்த முடியாமல் போகுதல்.
பயம்: நீரில் விழுந்தவுடன் ஏற்படும் அதீத பயத்தினால் கைகால்களைச் சரியாக இயக்க முடியாமல் போகுதல்.
4. சிறுவர்கள் மீதான கவனம்
சிறிய பிள்ளைகள் மிகக் குறைந்த நேரத்தில், மிகக் குறைந்த அளவு நீரிலும் (வளி, சிறிய தொட்டி போன்றவை) விபத்துக்குள்ளாகக் கூடும் என்பதால் மிகுந்த அவதானம் தேவை.
பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள்:
அறிமுகமில்லாத ஆறுகள், குளங்களில் நீராடுவதைத் தவிர்க்கவும்; பாதுகாப்பு எச்சரிக்கைப் பலகைகளை எப்போதும் கவனத்தில் கொள்ளவும்.
மழையுடனான காலநிலையின்போது திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்பதால் நீர்நிலைகளுக்கு அருகில் செல்வதைத் தவிர்க்கவும்.
நீராடுவதற்கு முன்னர் அவ்விடம் குறித்துப் பிரதேசவாசிகளிடம் கேட்டறிவதோடு, உயிர்காப்புப் பிரிவினர் (Lifeguards) இருப்பின் அவர்களின் ஆலோசனையைப் பின்பற்றவும்.
ஒருபோதும் தனியாக நீராடவோ நீந்தவோ செல்ல வேண்டாம். நீச்சல் தெரியாதவர்கள் பாதுகாப்பு அங்கிகள் (Life Jackets) இன்றி ஆழமான பகுதிக்குச் செல்லக்கூடாது.
நீங்கள் நீரில் மூழ்குவதாக உணர்ந்தால், பதற்றமடையாமல் உடலைத் தளர்த்தி நீரில் மிதக்க முயற்சி செய்யவும்.
நீரில் மூழ்குபவரைக் காப்பாற்ற நீங்களே நீரில் இறங்காமல், கயிறு அல்லது நீண்ட தடி ஒன்றைப் பயன்படுத்தி அவரை நிலத்திற்கு இழுக்க முயற்சி செய்யவும்.
உற்சவ காலங்களில் மக்கள் நீர்நிலைகளில் நீராடும் போக்கு அதிகமாகக் காணப்படுவதால், பொலிஸ் கடற்படைப் பிரிவின் உயிர்காப்பு அதிகாரிகள் மக்கள் அதிகளவு கூடும் இடங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பெறுமதியான மனித உயிர்களைப் பாதுகாக்கும் நோக்கில் வழங்கப்பட்டுள்ள இந்த அறிவுறுத்தல்களை முறையாகப் பின்பற்றுமாறு இலங்கை பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கின்றனர்.
மேலதிகத் தொடர்புகளுக்கு:
தொலைபேசி: 011-2887973
மின்னஞ்சல்: dir.media@police.gov.lk
பொலிஸ் ஊடகப் பிரிவு, 14ஆம் மாடி, சுகுருபாய, பத்தரமுல்லை.

34 minute ago
41 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
41 minute ago
46 minute ago