2026 மே 08, வெள்ளிக்கிழமை

dd

’பேய்’ மதுவை குடித்த ’நிஜப் பேய்’

Editorial   / 2026 மே 08 , பி.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேயை விரட்டுவதற்காகப் படைக்கப்படவிருந்த மதுபானத்தை (கால் போத்தல் அரக்கு), பூசைக்கு முன்னரே கணவன் குடித்துவிட்டு அதற்குப் பதிலாக தேநீரை ஊற்றி வைத்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று கறுவாத் தோட்டங்களுக்குப் புகழ்பெற்ற நகரமொன்றில் இடம்பெற்றுள்ளது.

  தனது மாமனார் இறந்த நாள் முதல், மருமகளுக்கு வீட்டில் பல விசித்திரமான அனுபவங்கள் ஏற்பட்டுள்ளன. இரவில் ஜன்னல் ஓரம் யாரோ நடக்கும் சத்தம், வீடு முழுவதும் வீசும் துர்நாற்றம், சோற்றுப் பானையில் எறும்புகள் மொய்த்தல் மற்றும் அடிக்கடி வரும் கெட்ட கனவுகள் என அவர் மிகுந்த அச்சத்தில் இருந்துள்ளார். இதனால் வீட்டில் எப்போதும் சண்டை சச்சரவுகளும் நீடித்துள்ளன.

  இதற்குத் தீர்வு காண அவர் ஒரு ஜோதிடரை (சாஸ்திரக்காரர்) நாடியுள்ளார். வீட்டில் இறந்த மாமனாரின் ஆவி அலைவதாகவும், மதுப்பழக்கம் இருந்த அந்த மாமனாரே இந்த குழப்பங்களுக்குக் காரணம் என்றும் ஜோதிடர் கூறியுள்ளார். ஆவியை விரட்டாவிட்டால் பெரும் ஆபத்து ஏற்படும் என அவர் எச்சரித்ததால், 'பேய் விரட்டும் பூசை'   செய்வதற்கு மருமகள் ஒப்புக்கொண்டார்.

  மாமனாருக்குப் பிடித்தமான உணவுகள் படைக்கத் தீர்மானிக்கப்பட்டது. அதில் முக்கியமாக மாமனாருக்கு விருப்பமான 'கல்' அராக்குக்கு முதலிடம் அளிக்கப்பட்டது. பூசைக்காக மருமகள் மிகவும் பக்தியுடன் ஒரு கால் போத்தல் மதுபானத்தை வாங்கி வந்து ஜோதிடரிடம் கொடுத்துள்ளார்.

மது அருந்தும் பழக்கம் கொண்ட அந்த ஜோதிடருக்கு, போத்தலின் நிறத்தைப் பார்த்ததும் சந்தேகம் எழுந்தது. மூடியைச் சோதித்தபோது அது ஏற்கனவே திறக்கப்பட்டு லேசாக மூடப்பட்டிருந்தது தெரியவந்தது. உள்ளே இருந்தது மதுபானம் அல்ல, அது 'பிளேன் டீ' (தேநீர்) என்பதை அவர் உணர்ந்துகொண்டார்.

  இதனைச் செய்தது யார் என்று ஜோதிடர் வினவியபோது, இறந்த மாமனாரைப் போலவே மதுவின் மீது அதீத ஆர்வம் கொண்ட கணவனே இந்த வேலையைச் செய்துள்ளார் என்பது மருமகளுக்குத் தெளிவாகியது. இதனால் ஆத்திரமடைந்த அவர், வந்திருந்தவர்கள் முன்னிலையிலேயே கணவனை மிகக் கடுமையாகச் சாடினார்.

அத்தோடு நில்லாமல், "இப்போதே எங்காவது சென்று உண்மையான மதுபானப் போத்தலை வாங்கி வா!" என்று கூறி நள்ளிரவில் கணவனை வீட்டிலிருந்து துரத்தியுள்ளார். பேய்க்கு வைத்த மதுபானத்தைக் குடித்த 'நிஜப் பேய்' யார் என்பது இப்போது அந்த ஊர் முழுவதும் பரவிச் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .