2026 பெப்ரவரி 18, புதன்கிழமை

“பாலியல் உறவில் ஏமாற வேண்டாம்”

S.Renuka   / 2026 பெப்ரவரி 18 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருமணம் செய்வதாக கூறி பாலியல் வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்ட நபரின் பிணை மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'திருமணத்திற்கு முன் ஆண், பெண் இருவரும் முற்றிலும் அந்நியர்கள் நெருங்கி பழகும் முன் மிகுந்த எச்சரிக்கை தேவை' என அறிவுறுத்தியுள்ளது.

டெல்லியை சேர்ந்த நபர் மீது, பெண் ஒருவர் திருமண மோசடி புகார் அளித்தார். திருமணம் செய்வதாக கூறி பலமுறை பாலியல் வன்புணர்வு செய்ததாக குற்றஞ்சாட்டினார். 

இந்த புகாரின் அடிப்படையில், குறித்த நபர் சிறையில் அடைக்கப்பட்டார். 

அவரது பிணை மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்தது. இதை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது பெண் மனுதாரர் சார்பில் கூறப்பட்டதாவது: கடந்த 2022இல், திருமண இணையதளம் மூலம் எனக்கு டெல்லியை சேர்ந்த நபர் அறிமுகமானார். திருமணம் செய்வதாக பொய்யான வாக்குறுதி  அளித்து டெல்லி மற்றும் துபாயில் வைத்து பலமுறை பாலியல் வன்புணர்வு செய்தார்.

துபாய்க்கு அவர் வற்புறுத்தலின் பேரில் சென்றேன். அப்போது அந்தரங்க வீடியோக்கள் பதிவு செய்து மிரட்டினார். பின், 2024 ஜனவரியில் பஞ்சாபில் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இவ்வாறு பெண் தரப்பில் கூறப்பட்டது.

விசாரணையில் நீதிபதிகள் கூறியதாவது: இது இருதரப்பினரின் சம்மதத்துடன் நடந்த உறவு போல் தெரிகிறது. திருமணத்திற்கு முன் ஒருவர் மீது முழு நம்பிக்கை வைக்கக் கூடாது. 

நெருங்கி பழகும் முன் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். திருமணத்துக்கு முன் துபாய்க்கு சென்றிருக்கக் கூடாது. இருதரப்பினரின் சம்மதத்துடன் ஏற்பட்ட உறவை, பிரச்சினைக்கு பின் குற்றவியல் வழக்காக மாற்றுவது சரியான அணுகுமுறை அல்ல. இரு தரப்பும் சமரசத்துக்கான வாய்ப்பை ஆராயுங்கள்.

குற்றஞ்சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடு வழங்கும் வாய்ப்பையும் பரிசீலிக்க வேண்டும் என்று கூறி, நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .