2026 ஏப்ரல் 21, செவ்வாய்க்கிழமை

பிரதமர் திறந்து வைக்க திட்டமிட்ட சுத்திகரிப்பு நிலையத்தில் தீ பரவல்

Janu   / 2026 ஏப்ரல் 20 , பி.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராஜஸ்தான் மாநிலம் பலோத்ராவில் உள்ள பச்பத்ரா சுத்திகரிப்பு நிலையத்தில் (Pachpadra Refinery), பிரதமர் நரேந்திர மோடியின் திட்டமிட்ட திறப்பு விழாவிற்கு ஒரு நாள் முன்னதாக, இன்று (திங்கட்கிழமை - 20) மதியம் பாரிய தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

இந்த சுத்திகரிப்பு நிலையத்தை பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை (21) அன்று திறந்து வைக்க இருந்துள்ளார். பிரதமர் பொதுமக்களிடையே உரையாற்றவிருந்த இடத்திலிருந்து சுமார் 800 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள அலகிலேயே (Unit) இந்த தீ பரவல் ஏற்பட்டுள்ளது. தகவல்களின்படி, இன்று மதியம் 2 மணியளவில் சுத்திகரிப்பு நிலையத்தின் கச்சா எண்ணெய் வடித்தல் அலகில் (Crude Distillation Unit - CDU) தீப்பிடித்துள்ளது. குழாய்கள் வழியாக பெறப்படும் கச்சா எண்ணெய் இங்குதான் சுத்திகரிக்கப்பட்டு மற்ற பிரிவுகளுக்கு விநியோகிக்கப்படுகிறது.

புகை வெளியேறுவதை கண்டதும், ஊழியர்கள் உடனடியாக தீயணைப்பு பாதுகாப்பு அமைப்புகளை செயல்படுத்திவிட்டு அந்த பகுதியை விட்டு வெளியேறியுள்ளனர். சுமார் 20 தீயணைப்பு வாகனங்கள் தீயை கட்ப்பாட்டுக்குள் கொண்டுவரும் பணியில் ஈடுபட்டுள்ளன.  இதுவரை காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதற்கிடையில், முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் தனது 'X' தளத்தில்: "பலோத்ரா, பச்பத்ராவில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்ட செய்தியைக் கேட்டு மிகுந்த கவலையடைந்தேன். இந்தச் சுத்திகரிப்பு நிலையம் அனைத்து ராஜஸ்தானியர்களுக்கும் பெருமைக்குரிய ஒரு திட்டமாகும். நாளை அதன் திறப்பு விழா நடைபெறவிருக்கும் வேளையில், இத்தகைய விபத்து நிகழ்ந்தது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இந்த நிகழ்வில் ஈடுபட்டுள்ள அனைவரின் பாதுகாப்புக்காகவும் நான் பிரார்த்தனை செய்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

தீ முழுமையாக அணைக்கப்பட்ட பின்னரே விபத்துக்கான காரணம் மற்றும் சேத விவரங்கள் குறித்துத் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர். சுத்திகரிப்பு நிலைய வளாகம் முழுவதும் 'அதிதீவிர எச்சரிக்கை' (High Alert) விடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .