2026 ஏப்ரல் 21, செவ்வாய்க்கிழமை

முதலாளி அடித்த ’குவாட்டர்’ ; அரச அதிகாரிக்கு ஆப்பு

Janu   / 2026 ஏப்ரல் 21 , பி.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாப்பஹுவ பகுதியில் வியாபாரத்தில் பெயர்பெற்ற ஒரு பெரிய மொத்த விற்பனை கடை. அங்கு கைநிறைய சம்பளம் வாங்கும் ஒரு அரச உத்தியோகத்தர் தான் ‘நம்பர்-1’ வாடிக்கையாளர். மாதம் முழுவதும் கடனுக்கு சாமான்களை வாங்கிவிட்டு, சம்பளம் வந்ததும் நச்சென்று கடனைத் தீர்ப்பவர். இதனால் கடையின் முதலாளிக்கும் இந்த அரச உத்தியோகத்தரின் குடும்பத்திற்கும் இடையே ஒரு நெருங்கிய பந்தமே உருவானது.

சமீபத்தில் அந்த அரச உத்தியோகத்தரின் மனைவி திடீரென நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புத்தாண்டுக்கு சில நாட்களுக்கு முன்னர்தான் அவர் வீடு திரும்பினார். முதலாளியும் அவரது மனைவியும் நேரில் வந்து நலம் விசாரிக்கும் அளவிற்கு நட்பு ஆழமாக இருந்தது.

புத்தாண்டு தினத்தன்று முதலாளியிடமிருந்து அந்த அரச உத்தியோகத்தருக்கு ஒரு அழைப்பு வந்தது. "இன்று இரவு நீங்கள் யாரும் சமைக்க வேண்டாம். எங்கள் வீட்டிலிருந்து விசேட உணவுகளை நானே எடுத்துக்கொண்டு வருகிறேன்" என்று மிகுந்த அன்புடன் முதலாளி கூறினார்.

மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததாலும், குழந்தையை வைத்துக்கொண்டு சமைப்பது சிரமம் என்பதாலும், அந்த உத்தியோகத்தர் மகிழ்ச்சியுடன் ஒத்துக்கொண்டார். "முதலாளிதான் சாப்பாடு கொண்டு வருகிறாரே, இன்று ஒருநாள் ஓய்வு எடுப்போம்" என்று மனைவியும் நிம்மதி அடைந்தார்.

சூரியன் மறைந்தது, இருள் சூழ்ந்தது. நேரம் நத்தை வேகத்தில் நகர்ந்தது. பசியால் குழந்தை அழத் தொடங்கியது. ஆனால், முதலாளியையும் காணோம், அந்த 'ஸ்பெஷல்' சாப்பாட்டையும் காணோம். பொறுமை இழந்த அரச உத்தியோகத்தர், முதலாளிக்கு போன் செய்தார்.

மறுமுனையில் போனை எடுத்தது முதலாளியின் மனைவி. அவர் சொன்ன பதில் இடி போல இறங்கியது:

"அண்ணே... அவர் குடித்துவிட்டு மாடு மாதிரி தூங்குகிறார்! உங்களுக்குச் சாப்பாடு தருவதாகச் சொன்னது கூட எனக்குத் தெரியாது. போதையில் ஏதோ உளறியிருக்கிறார்!"

விவாதம் அங்கேயே முடிந்தது. அன்று புத்தாண்டு தினம் என்பதால் ஊரில் இருந்த அத்தனை கடைகளும் மூடப்பட்டிருந்தன. ஒரு துண்டு பாண் கூட வாங்க வழியில்லை. மனைவியின் சுகவீனம் காரணமாக வீட்டில் பலகாரங்கள் ஏதும் செய்திருக்கவில்லை.

பசியால் அழுத குழந்தை அப்படியே தூங்கிப்போனது. களைத்துப் போயிருந்த கணவனும் மனைவியும் செய்வதறியாது, அந்தப் புத்தாண்டு இரவை வெறும் வயிற்றோடு கழித்தனர்.

"முதலாளிக்கு மிகச் சிறந்த வாடிக்கையாளராக இருந்ததால் கிடைத்த 'பரிசு' இதுதான்" என அந்தப் பகுதியில் உள்ளவர்கள் இப்போது கிண்டலாகப் பேசி வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .