2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மைத்திரி உலக நாட்டு தலைவர்களுக்கு முன்மாதிரி: பவர்

Kanagaraj   / 2015 நவம்பர் 23 , பி.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆபிரிக்காவிலும் ஆசியாவிலும் உள்ள தலைவர்கள் பெரும்பாலும் அதிகாரத்தை தனதாக்கிக் கொள்ள முயற்சிக்கும் அதேவேளை, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  அதிகாரத்தை விட்டுவிடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதை பாராட்டுகின்றேன் என்று தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்க தூதுவரான சமந்தா பவர், இதனை ஏனைய உலக தலைவர்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகுமென அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் சமந்தா பவருக்கும் இடையில், ஜனாதிபதி செயலகத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில், ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நல்லிணக்க வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது புதிய அரசாங்கம் மிகுந்த நம்பிக்கையுடனும் ஏற்றுக்கொள்ளக்கூடியவாறும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.  இவ்வேலைத்திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் உத்தியோகத்தர்களுக்கும் நிறுவனங்களுக்குமிடையிலான உறவு மேலும் விரிவுபடுத்தப்பட முடியுமாயின் சிறந்ததாகும்.

நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய சீர்திருத்தங்களை பாராட்டுகின்றேன். அதன் மூலம் நாட்டில் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது.

நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய அரசியல் மறுசீரமைப்புக்களின் ஊடாக சந்தேகம் இன்றி பொருளாதார நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியுமெனக் குறிப்பிட்ட தூதுவர், அதன்மூலம் ஒளி விளக்காக மிளிருவதற்கு முடியுமெனத் தெரிவித்தார்.

இலங்கையின் புதிய வேலைத்திட்டம் பற்றி சர்வதேச சமூகம் மிக ஆர்வத்துடன் இருப்பதாக தூதுவர்  குறிப்பிட்டார் என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கருத்து

இலங்கையின் நல்லிணக்க வேலைத்திட்டத்தை வெற்றிகொள்ளச் செய்வதற்கு அமெரிக்க அரசாங்கம் வழங்கிய ஒத்துழைப்புக் நன்றி தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசு என்ற ரீதியல் மிகவும் பொறுமையாக பணியாற்றும் பொறுப்பு புதிய அரசுக்கு உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நல்லிணக்க செயன்முறையானது, உண்மையை ஆராய்தல், நியாயம் வழங்குதல், இழப்புக்களை ஈடு செய்தல், மீண்டும் அவை ஏற்படுவதை தடுத்தல் ஆகிய கோட்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றது.

நீண்டகாலமாக நெருக்கடிக்குள்ளாகி உள்ள நாடு என்ற ரீதியில் இவ்வாறான செயற்பாடுகளின்போது பல்வேறு கருத்துக்களைக்கொண்ட குழுக்களுடன் பணியாற்ற வேண்டியுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அங்கு மேலெழும் கருத்துக்களுக்கிடையே முரண்பாடுகள் நிலவுவதாகவும் அதன்போது அரசு என்ற ரீதியல் மிகவும் பொறுமையாக பணியாற்றும் பொறுப்பு புதிய அரசுக்கு உள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நாட்டின் சுதந்திரத்தை உறுதி செய்தல், ஜனநாயகத்தை வலுப்படுத்தல், வறுமையை ஒழித்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் கடந்த 10 மாதங்களுக்குள் அரசாங்கம் மேற்கொண்ட வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் பற்றியும் இங்கு ஜனாதிபதியால் தூதுவருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியைச் சுற்றி குவிக்கப்பட்டுள்ள அதிகாரங்களை நாடாளுமன்றத்திடமும் சுயாதீன ஆணைக்குழுக்களிடமும் பகிர்ந்தளிக்க முடிந்துள்ளதென ஜனாதிபதி  இதன்போது தெரிவித்தார்.

நல்லிணக்க வேலைத்திட்டத்தை அடைந்துகொள்வதில் இலங்கை மேற்கொண்டுள்ள அர்ப்பணிப்புப்பற்றி குறிப்பிட்ட ஜனாதிபதி , வடக்கில் காணிகளை விடுவித்தல், மீளக் குடியமர்த்துதல் ஆகிய நடவடிக்கைகள் போன்றே, மாகாணங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகள் பற்றியும் அரசு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X