2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

மீனவர்கள் விவகாரம்: மோடிக்கு ஜெயா கடிதம்

George   / 2016 ஜூன் 11 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை சிறையில் வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 21 பேரையும் மீட்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் எழுதப்பட்டுள்ளதாவது,

'இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவம் மீண்டும் நடந்திருப்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன். 

இராமநாதபுரம் மாவட்டம், இராமேசுவரம் மீன்பிடி தளத்தில் இருந்து மீன்பிடிப்பதற்காக ஒரு இயந்திர படகில் சென்ற 6 தமிழக மீனவர்கள் 9 ஆம் திகதி அதிகாலையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் இலங்கை தலைமன்னாருக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.

பாக். நீரிணைப்பகுதியில் பாரம்பரியமாக மீன்பிடித்து வந்த இடத்தில் தற்போது மீன்பிடிக்கும்போது, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் அல்லது கடத்தப்படும் அச்சத்தை தமிழக மீனவர்கள் எதிர்கொள்வது மிகுந்த வேதனை அளிக்கிறது.

அண்மையில் கைது செய்யப்பட்ட 15 மீனவர்கள் தற்போது இலங்கையில் இன்னும் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பதை உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கும்போது, அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட மீன்பிடி படகுகளை இலங்கை அரசு விடுவிப்பதில்லை.

இலங்கை அரசின் இந்த நிலைப்பாடு, தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தின் குரல்வளையை நெரிப்பதாக உள்ளது. இதனால் தமிழக மீனவர்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலை குறித்து இலங்கை அரசின் உயர்மட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு நீங்கள் கொண்டு செல்லவேண்டும். கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களும், அவர்களின் படகுகளும் உடனடியாக விடுவிக்கப்படுவதை நீங்கள் உறுதி செய்யவேண்டும்.

கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தது தொடர்பான 1974 மற்றும் 1976ஆம் ஆண்டு ஒப்பந்தங்கள் செல்லாது என்று நீதிமன்றமத்தில் நான் தொடர்ந்துள்ள வழக்கில் தமிழக அரசும் தன்னை இணைத்துக்கொண்டுள்ளது. எனவே இலங்கை, இந்தியாவுக்கு இடையேயான சர்வதேச கடல் எல்லை பிரச்சினை முடிவு பெறாத ஒன்றாக உள்ளது.

இந்தியா-இலங்கை இடையே உருவான அந்த சட்டவிரோதமான ஒப்பந்தங்கள் இரத்து செய்யப்பட்டு, தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகள் மீட்கப்படவேண்டும் என்பதை தமிழக அரசு மீண்டும் மீண்டும் உறுதியாக கேட்டுக்கொள்கிறது.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள 6 மீனவர்கள், ஒரு மீன்பிடி படகையும் சேர்த்து, மொத்தமுள்ள 21 தமிழக மீனவர்களையும் அவர்களின் 92 மீன்பிடி படகுகளையும் மீட்பதற்காக, நீங்கள் தனிப்பட்ட முறையில் இந்த பிரச்சினையில் தலையிடுவதோடு, இதை இலங்கை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லவேண்டும் என்று வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடவேண்டும்.'
என ஜெயலலிதா, மோடிக்கு எழுதியுள்ள கடித்தத்தில் கூறப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .