2024 மே 07, செவ்வாய்க்கிழமை

மக்களைத் தவறாக வழிநடத்த தீய நடவடிக்கை

Nirshan Ramanujam   / 2017 ஒக்டோபர் 20 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிர்ஷன் இராமானுஜம்

“ஊடகங்கள், மக்களைத் தவறாக வழிநடத்தக் கூடாது. எது உண்மை, எது உண்மையில்லை என்பதை அறிந்து செய்தி வெளியிட வேண்டும்” என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் வைத்து நேற்று (19) தெரிவித்தார்.  

‘இங்கே யார் தவறாக வழிநடத்துகிறார்கள்?’ என, ஊடகவியலாளர்களைப் பார்த்துக் கடும் கோபத்தில் அவர் கேள்வி எழுப்பினார்.  

உத்தேச அரசமைப்பு தொடர்பில் மூன்று நிறுவனங்கள் நடத்திய ஆய்வின் அறிக்கையைக் கையளிக்கும் நிகழ்வு நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெற்றது.

இதன்பின்னர் ஊடகவியலாளர்களை நோக்கி, பிரதமர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.  

நாட்டுக்கு புதிய அரசமைப்பு, அல்லது தற்போதைய அரசமைப்பில் திருத்தம் அவசியமல்ல என அஸ்கிரிய மற்றும் மல்வத்து மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட பீடங்கள் அறிவித்துள்ளன என வெளியாகியுள்ள செய்தி குறித்து ஆட்சேபனை வெளியிட்ட பிரதமர், “அஸ்கிரிய, மல்வத்து பீடங்களின் மகாநாயக்கர்கள் கலந்துகொள்ளாத கூட்டம் தொடர்பில், அவர்களுடைய படங்களுடன் செய்தி வெளியிடுவதா?” எனக் கேள்வி எழுப்பினார்.  

“ஊடகங்களில் புதன்கிழமையும், அதேபோல் வியாழக்கிழமையும் அனைத்துப் பத்திரிகைகளிலும் நான் பார்த்தேன். அனைத்து ஊடகங்களும், மல்வத்துபீட மகாநாயக்கரின் படத்தைப் பிரசுரித்திருந்தன. எனினும், மல்வத்துபீட மகாநாயக்கர், தற்போது நாட்டில் இல்லை. நான் அவருடன் கதைத்தேன். அவர் இலங்கையில் இல்லை. பின்னர் எப்படி அவருடைய படம் வரமுடியும்?”என்று அவர் கேள்வியெழுப்பினார்.  

மல்வத்து, அஸ்கிரிய பீடங்களின் இணைந்த சபையான கரக சபாவின் அறிக்கையை, ஊடகங்கள் பிரசுரித்தமை தொடர்பாகவே, தனது கோபத்தை, பிரதமர் வெளிப்படுத்தினார்.  

அப்போது, அங்கு கூடியிருந்த ஊடகவியலாளர்களிடம், அவர்களின் பத்திரிகை ஆசிரியர்களுக்கு அழைப்பை ஏற்படுத்துமாறும், அவர்களோடு உரையாட வேண்டுமெனவும், பிரதமர் குறிப்பிட்டார். “நான் அவர்களுடன் பின்னர் கதைக்கிறேன்” என்று, அவர் பின்னர் குறிப்பிட்டார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X