2026 மார்ச் 16, திங்கட்கிழமை

மன்னாரில் பெண் பாரிய பண மோசடி: 40 மில்லியன் ரூபாய் பிணையில் விடுவிப்பு

Editorial   / 2026 மார்ச் 16 , பி.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ரொசேரியன் லெம்பட்

 போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்ட கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 66 வயதுடைய பெண் ஒருவரை, தலா 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் செல்ல மன்னார் நீதிமன்றம்   திங்கட்கிழமை (16) உத்தரவிட்டது.

   கடந்த 2019 முதல் 2023 ஆம் ஆண்டு வரை தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்குப் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட முக்கிய சந்தேக நபர் ஒருவர், அதன் மூலம் ஈட்டிய வருமானத்தில் ஒரு சொகுசு மாடிக் குடியிருப்பு, ஐந்து அறைகளைக் கொண்ட வீடு, ஒரு கார் மற்றும் சுமார் 360 பவுண் தங்க நகைகளை வாங்கியுள்ளதாகத் தகவல்கள் கிடைத்தன. இது குறித்து சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

முக்கிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் சட்டவிரோத நிதியில் வாங்கியதாகக் கருதப்படும் வீடுகள் மற்றும் கார் என்பவற்றை முடக்குவதற்கு மன்னார் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலதிக விசாரணையில், முக்கிய சந்தேக நபரின் மாமியாரான குறித்த 66 வயதுப் பெண், சட்டவிரோத நடவடிக்கையின் மூலம் பெறப்பட்ட 360 பவுண் தங்க நகைகளை பல்வேறு நிதி நிறுவனங்களில் அடகு வைத்ததுடன், மன்னார் பகுதியிலுள்ள பல நகைக் கடைகளில் விற்றுள்ளமையும் கண்டறியப்பட்டது.

சட்டவிரோத சொத்துக்களின் தோற்றத்தை அறிந்திருந்தே அவற்றை மறைக்க உதவியமை மற்றும் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றங்களுக்கு உடந்தையாக இருந்தமைக்காக, குறித்த பெண் ஞாயிற்றுக்கிழமை (15) கைது செய்யப்பட்டார்.

அவர்,  மன்னார் நீதவான் முன்னிலையில் திங்கட்கிழமை (16) ஆஜர்படுத்தப்பட்ட போது, அவரை 40 மில்லியன் ரூபாய் (தலா 20 மில்லியன் வீதம் இருவர்) பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டார். அத்துடன், இவ்வழக்கு விசாரணை மீண்டும் எதிர்வரும் மே மாதம் 27 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X