2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

மீனவர்கள் குறித்து ஸ்டாலின் அவசர கடிதம்

Editorial   / 2023 ஜூலை 10 , பி.ப. 02:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 15 பேரையும், அவர்களது மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கைகளை எடுக்கக் கோரி மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், "தமிழ்நாட்டைச் சேர்ந்த 15 மீனவர்கள் IND-TN-10-MM-677 மற்றும் IND-TN-10-MM-913 பதிவு எண்கள் கொண்ட படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற நிலையில், 9-7-2023 அன்று இலங்கைக் கடற்படையினரால்   கைது செய்யப்பட்டுள்ளதோடு,   மீன்பிடிப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இச்சம்பவம் தமிழ்நாட்டிலுள்ள மீனவ சமூகத்தினரிடையே மன உளைச்சலையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்திய - இலங்கைக் கடல் எல்லையை ஒட்டிய பகுதிகளில் மீன்பிடித் தொழிலை நம்பியே பல்லாயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரம் அடங்கியுள்ளதை ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் நன்கு அறிவார்.

குடும்பத்தையும், சமூகத்தையும் பராமரிக்க மீனவர்கள் மீன்பிடித் தொழிலை மட்டுமே நம்பியுள்ளனர். அவர்கள், துரதிர்ஷ்டவசமாக, இலங்கைக் கடற்படையினரால் இதுபோன்று கைது செய்யப்படும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருவது மீனவர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் ஆழ்ந்த வேதனையிலும், நிச்சயமற்ற தன்மையிலும் ஆழ்த்தியுள்ளது.

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நமது மீனவர்களை உடனடியாக விடுவிக்கவும், பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து மீன்பிடிப் படகுகளைத் திரும்ப ஒப்படைக்கவும் ஒன்றிய அரசு, இலங்கை அதிகாரிகளுடன் தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தற்போது இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையில் சுமுகமான நட்புறவு பேணப்பட்டு வரும் நிலையில், தூதரக நடவடிக்கைகள் மூலமாகத்தான் மீனவர்களின் உரிமைகள் மற்றும் வாழ்வாதாரங்களைப் பாதுகாத்திடவும், சுமுகத் தீர்வினை எய்திடவும் இயலும்.

இதுதொடர்பாக ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சகத்திலிருந்து சாதகமான பதிலை எதிர்பார்க்கிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X