2026 மே 14, வியாழக்கிழமை

dd

மேலும் 10 நாட்களுக்கு பயணத்தடை நீடிப்பு

Niroshini   / 2021 மே 25 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மகேஸ்வரி விஜயனந்தன்

 

கொரோனா பரவலைக் கட்டுபடுத்துவதற்காக, நாடு பூராகவும் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுபாடானது, அடுத்த மாதம் 7ஆம் திகதி வரை நீடிக்கப்படுவதாகத் தெரிவித்த நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, அத்தியாவசியப் பொருள்களைக் கொள்வனவு செய்வதற்காக, 3 நாள்களுக்கு மாத்திரம் பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்றார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (24) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்துரைத்த அமைச்சர், “இந்த மாதம் 21ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டிருக்கும் பயணக்கட்டுபாடுகள், இன்று (25) அதிகாலை 4 மணிக்குத் தளர்த்தப்பட்டு, மீண்டும் இன்று இரவு 11 மணி தொடக்கம் அமுலுக்கு வருகிறது” என்றார்.

“இவ்வாறு அமுலுக்கு வரும் பயணக்கட்டுபாடு, 31ஆம் திகதி அதிகாலை 4 மணிக்குத் தளர்த்தப்படும். மீண்டும் அன்று (31) இரவு 11 மணிக்கு அமுல்படுத்தப்படும் பயணக்கட்டுபாடு, ஜூன் மாதம் 4ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்பட்டு, அன்றைய தினம் இரவு 11 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்பட்டு, ஜூன் மாதம் 7ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கே தளர்த்தப்படும்.

“பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் நாட்களில், வீட்டிலிருந்து ஒருவர் மாத்திரமே அத்தியாவசியப் பொருள் கொள்வனவுக்காக வெளியே செல்ல முடியும் என்பதுடன், அவ்வாறு செல்பவர்கள், தமது வீடுகளுக்கு அருகில் இருக்கும் வர்த்தக நிலையங்களுக்கு மாத்திரமே செல்ல முடியும்” என்றும் குறிப்பிட்டார்.

விவசாயிகள் உணவு உற்பத்திகளைச் செய்தால் மாத்திரமே நாட்டு மக்கள் உண்ணலாம் என தெரிவித்த அமைச்சர், எனவே விவசாயிகள் தமது உற்பத்திச் செயற்பாடுகளை முன்னெடுக்கலாம் என்றும் நடமாடும் வாகனங்கள் மூலமாக விவசாயிகளது உற்பத்தி பொருள்கள்களைக் கொள்வனவு செய்து, பொதுமக்களுக்கு விநியோகிக்க முடியுமென்றும் குறிப்பிட்டார்.

நாட்டில் ஏற்பட்ட முதலாவது இரண்டாவது அலைகளின் போது நடமாடும் பொருள் விற்பனைகளைச் செய்தவர்கள், இம்முறையும் அவ்வாறே அந்தச் செயற்பாடுகளை முன்னெடுக்கலாம் என்றும் குறிப்பிட்ட அமைச்சர்,  ஏற்றுமதிச் செயற்பாடுகளை முன்னெடுக்கவும் அனுமதியுண்டு என்றார்.

அத்துடன், நாளை (26), 27 மற்றும் 28ஆம் திகதிகளில், பேலியாகொட மீன்சந்தை மூடப்படும் என மீன்பிடி இராஜாங்க அமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர் ஜோன்ஸ்டன், அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் அனைத்துத் தீர்மானங்களும், மக்களைப் பாதுகாக்கவே எடுக்கப்படுகின்றன என்றார்.

“வாகனங்கள் பயணிக்க அனுமதி வழங்கினால், பயணக்கட்டுபாடுகளை விதிப்பதில் அர்த்தமில்லை. எனவே மக்களது உயிர்களைப் பாதுகாக்க அதிகூடிய ஒத்தழைப்பை எமக்கு தாருங்கள்” என்றும் வலியுறுத்தினார்.

பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள தினங்களில், மதுபானசாலைகள் முழுமையாக மூடப்படும் எனத் தெரிவித்த அமைச்சர், பயணக்கட்டுபாடுகளை மீறுபவர்கள், விமானப் படையினரின் ட்ரோன் கமெராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .