2026 பெப்ரவரி 15, ஞாயிற்றுக்கிழமை

விடிய விடிய பப்ஜி கேம்: இளைஞன் பலி

S.Renuka   / 2026 பெப்ரவரி 15 , பி.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

பப்ஜி கேமிற்கு அடிமையான இளைஞன், விடிய விடிய விளையாடியதில் அவருக்கு எதிர்பாராத விதமாக இரத்த அழுத்தம் அதிகரித்த நிலையில், மூளையில் இரத்த நாளம் வெடித்துள்ளது. அவருக்கு உடனடியாகத் தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சைப் பலனில்லாமல் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

வேலைக்கு நடுவே சற்று நேரம் கேம் விளையாடுவது கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்கும். ஆனால், இந்தக் காலத்தில் சிலர் வீடியோ கேம்களுக்கே அடிமையாகிவிடுகிறார்கள். இரவு முழுவதும் கூட கேம் விளையாடுகிறார்கள். அப்படி விளையாடும்போது அவர்களுக்கு மோசமான உடல்நிலை பாதிப்புகளும் கூட ஏற்படுகிறது.

அப்படியொரு சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதில் உயிரிழந்த நபர் கைர்நகரைச் சேர்ந்த முகமது கைஃப் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் வீட்டில் பிரபலமான பப்ஜி ஆன்லைன் விளையாட்டை எப்போதும் விளையாடுவாராம். ஹெட்போனை போட்டுக்கொண்டு விடிய விடிய கேம் விளையாடுவதை அவர் வாடிக்கையாக வைத்துள்ளார். இரவு நேரங்களில் இப்படிக் கண்விழித்து விளையாட வேண்டாம் என அவரது வீட்டில் பலரும் அறிவுறுத்திய போதிலும் இவர், அதையெல்லாம் கேட்பதாக இல்லை. தொடர்ந்து இரவு நேரங்களில் கண் விழித்து கேம் விளையாடிக் கொண்டு இருந்துள்ளார்.
குறித்த இளைஞன் சம்பவத்தினத்தன்று வழக்கம் போலவே காதுகளில் ஹெட்ஃபோன்களை அணிந்தபடி கைஃப் பப்ஜி கேமை உக்கிரமாக விளையாடிக் கொண்டு இருந்தார்.


அப்போது அவருக்குத் திடீரெனக் கடுமையான தலைவலி ஏற்பட்டுள்ளது. தனக்குப் பயங்கரமாகத் தலை வலிப்பதாக அவர் சொல்லியுள்ளார். பிறகு ஓரிரு நொடிகளிலேயே அவர் அங்கேயே இருந்தபடியே மயங்கிச் சரிந்து விழுந்துள்ளார். அவரது நிலையைக் கண்டதும் அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், எந்தவொரு தாமதமும் இல்லாமல் அவரை உடனடியாக அருகிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

கைஃபின் உடல்நிலை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதை உணர்ந்த உள்ளூர் மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக அவரை டெல்லியில் உள்ள சிறப்புத் தனியார் மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்குத் தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

ரியல் எஸ்டேட் தொழிலில் இருக்கும் இளைஞனின் தந்தை கூறியதாவது, தனது மகன் கடந்த பத்து ஆண்டுகளாக உயர் இரத்த அழுத்தப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு வந்ததாகத் தெரிவித்தார். 
மேலும், இதற்காக கைஃப் தனியாகச் சிகிச்சையும் எடுத்து வந்துள்ளார். சிகிச்சையில் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருந்துள்ளது. ஆரோக்கியமாகவே காணப்பட்டார். இந்தச் சூழலில் தான் கேம் விளையாடும்போது அவருக்கு இரத்த அழுத்தம் அதிகரித்து அவர் உயிரிழந்துள்ளார். இதுபோல ஒரு சம்பவம் ஏற்படும் என அவரது குடும்பத்தினர் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X