2026 மார்ச் 22, ஞாயிற்றுக்கிழமை

விரிவுரையாளரின் உடல் அடக்கம்: மயானத்துக்கு மகளும் வந்தார்

Editorial   / 2026 மார்ச் 22 , பி.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

பு.கஜிந்தன்

யாழ்ப்பாணத்தில் தனது மகள் மற்றும் மருமகனால் படுகொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக விரிவுரையாளரின் உடல், பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில்   கோம்பயன்மணல் இந்து மயானத்தில்  ஞாயிற்றுக்கிழமை (22) அடக்கம் செய்யப்பட்டது.

குறித்த விரிவுரையாளர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்டு, தனங்களப்பு பகுதியில் வீசப்பட்டிருந்தார். இக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களான அவரது மகளும் மருமகனும் திருகோணமலை பகுதியில் தலைமறைவாகி இருந்தனர்.

விரிவுரையாளரின் மகன் மேற்கொண்ட முயற்சியின் பலனாக, யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் சந்தேகநபர்கள் இருவரையும் கைது செய்ததுடன், மறைத்து வைக்கப்பட்டிருந்த சடலத்தையும் மீட்டிருந்தனர்.

விரிவுரையாளரின் இறுதிச் சடங்குகள் ஞாயிற்றுக்கிழமை (22) அன்று அவரது இல்லத்தில் நடைபெற்றன. இந்த வழக்கில் சந்தேகநபராகக் கருதப்படும் விரிவுரையாளரின் மகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், தனது கட்சிக்காரர் தாயின் இறுதிச் சடங்கில் பங்கேற்க அனுமதி கோரி நீதிமன்றத்தில் விண்ணப்பித்திருந்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், சந்தேகநபரான மகளைப் பொலிஸ் பாதுகாப்புடன் மயானத்திற்கு அழைத்துச் சென்று இறுதிச் சடங்கில் பங்கேற்க அனுமதி வழங்கியது. அதற்கமைய, அவர் பலத்த பாதுகாப்புடன் மயானத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

மயானத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெற்ற போது, அங்கு எந்தவிதமான ஒளிப்படங்களையோ அல்லது காணொளிகளையோ பதிவு செய்ய வேண்டாம் என சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் ஊடகவியலாளர்களுக்குக் கடும் நிபந்தனை விதித்தார். விதிகளை மீறிப் பதிவு செய்பவர்கள் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக எச்சரித்த அவர், ஊடகவியலாளர்களை மயானத்திற்கு வெளியே நிற்குமாறும் கேட்டுக்கொண்டார்.

எனினும், ஊடகவியலாளர்கள் அந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். சந்தேகநபர் பொலிஸாரால் மீண்டும் அழைத்துச் செல்லப்பட்ட பின்னர், செய்தி சேகரிப்புக்காகப் படங்களைப் பதிவு செய்யலாமா என ஊடகவியலாளர்கள் கேட்டபோதும் சட்டத்தரணி அதற்கு மறுப்புத் தெரிவித்தார். இருப்பினும், அவ்விடத்தில் இருந்த பொலிஸார் தரப்பிலிருந்து ஊடகவியலாளர்களுக்கு எவ்வித எதிர்ப்புகளும் தெரிவிக்கப்படவில்லை.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .