2025 ஜூலை 16, புதன்கிழமை

‘வெறுமைக்கு வியாக்கியானமா?’

Editorial   / 2020 ஏப்ரல் 16 , மு.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

மே மாதம் 2ஆம் திகதியன்று என்ன நடக்குமென்பது தொடர்பில் பல்வேறு மட்டங்களிலும் கருத்தாடல்கள் இடம்பெறுகின்றன. கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை அரசமைப்பின் பிரகாரம் கூட்டுமாறு எதிரணியினர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், தேர்தலை நடத்துவதற்கான முழுமையான அதிகாரம், அரசமைப்பின் பிரகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கே உள்ளதென,  அரசாங்கம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றை முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் வரையிலும், பொதுத் தேர்தலை நடத்த முடியாது என்றும் அவ்வாறு நடத்துவது நாட்டுக்கும் மக்களுக்கும் ஆபத்தாகிவிடுமெனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய, ஏற்கெனவே அறிவித்திருந்தார்.

இந்நிலையில், பொதுத் தேர்தலையும் பகுதி பகுதியாக நடத்துவதற்கு அரசாங்கம் ஆலோசித்து வருவதாக, தகவல்கள் வெளியாகியிருந்தன. இதற்கிடையில், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு மே மாதம் 2ஆம் திகதியுடன் மூன்று மாதங்கள் நிறைவடைகின்றன. ஆகையால், மே 2ஆம் திகதியன்று என்ன நடக்குமென பலரும் வினவுகின்றனர்.

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் வியாக்கியானம் கேட்பதற்கு உயர் நீதிமன்றத்தை நாடவேண்டிய தேவை அரசாங்கத்துக்கு இல்லையென்பதனாலும் தேர்தலை நடத்துவதற்கான முழுமையான அதிகாரம், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கே உள்ளது என்பதனாலும், அரசாங்கம் இந்த விவகாரத்தில் தலையிடாதென, ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரியவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

இந்நிலையில், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, 3 மாதங்களுக்குள் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

நாடாளுமன்றம் மார்ச் மாதம் 2ஆம் திகதி கலைக்கப்பட்டது. மே மாதம் 2ஆம் திகதியுடன் மூன்று மாதங்கள் நிறைவடைகின்றன. இது தொடர்பிலான கருத்தாடல்கள் இடம்பெறுகின்ற நிலையிலேயே, அமைச்சர் விமல் வீரசன்ச, விளக்கமொன்றை கொடுத்துள்ளார்.

'மே மாதம் 2ஆம் திகதி என்ன நடக்குமென்பதே பலருடைய கேள்வியாகும். அக்கேள்விக்கு அரசாங்கத்திடம் பதில் இல்லை. தேர்தலை பிற்போடவேண்டிய தேவையும் அரசாங்கத்துக்கு இல்லை. கொரோனா சவாலை எதிர்கொண்டு முன்னேறிகொண்டிருக்கும் அரசாங்கத்துக்கு, நாடாளுமன்றத் தேர்தல் ஒன்றும் பொருட்டல்ல. ஆகையால்தான், கொரோனா வைரஸ் வியாபிக்காமல் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து, கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது.

“இதேவேளை, அடுத்தக்கட்ட நடவடிக்கையாக, பல்கலைக்கழகங்களைப் பகுதி பகுதியாகத் திறப்பதற்கான அறிவிப்புகள் விடுக்கப்பட்டுள்ளன. பாடசாலைகளையும் திறப்பதற்கான திகதி குறிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றொழிப்பின் வேலைத்திட்டம் வெற்றிப் பாதையில் செல்வதனால்தான், இவ்வாறான முன்னகர்வுகளை முன்னெடுக்க முடிகிறது.

“நாடாளுமன்றம் கலைக்கபட்டு, மூன்று மாதங்கள் கடந்துவிட்டால், அடுத்த கட்டமாக என்ன செய்யவேண்டும் என்பது தொடர்பில் அரசமைப்பில் குறிப்பிடப்படவில்லை. அதற்காக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆலோசனையின் பிரகாரம், உயர் நீதிமன்றத்துக்குச் செல்லவேண்டிய தேவையில்லை. அதன் பின்னர், ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரங்களின் பிரகாரமும் பிரதமர், காபந்து அரசாங்கத்தின் அமைச்சரவை பிரகாரமும், எவ்வாறான தீர்மானங்களை எட்டவேண்டுமென்பது தொடர்பில் காபந்து அரசாங்கமே தீர்மானிக்கும். சகலவற்றையும் நல்லதாகவே சிந்திக்கவேண்டும்” என்று அமைச்சர் விமல் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், மே மாதம் 2ஆம் திகதிக்குப் பின்னர் வெறுமையாகிவிடும் என்றும் அதற்கு வியாக்கியானம் கேட்கவேண்டி எந்தவொரு தேவையும் அரசாங்கத்துக்கு இல்லை என்றும் தெரிவித்துள்ள அவர், அரசமைப்பின் பிரகாரம், ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரத்துக்கு அமைவாக, அடுத்த கட்ட நகர்வுகள் முன்னெடுக்கப்படும் என்றும், சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டு அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .