2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

'காணி மீட்பு சட்டத் திருத்தத்துக்கு மீண்டும் அங்கிகாரம்'

Niroshini   / 2015 டிசெம்பர் 15 , மு.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யூ.எல்.மப்றூக்,எஸ்.எம்.அறூஸ்

நான் நீதியமைச்சராக இருந்த பொழுது, காணி மீட்பு சட்டத்திருத்தத்தை வரைந்தேன். ஆனால், குறுகிய நோக்கம் கொண்ட அப்போதைய அரசாங்கத்தினால் அவ்விடயம் தடுக்கப்பட்டது. ஆயினும், தற்போதைய நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ அதனை மீண்டும் அமைச்சரவையில் சமர்பித்ததன் பயனாக அதற்கு அங்கீகாரம் கிடைத்திருக்கின்றது.அதன் காரணமாக அடுத்த மாதமளவில் வட,கிழக்கில் வசிக்கும் தமது காணிகளை இழந்த மக்கள் நன்மையடைய இருக்கின்றார்கள் என நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

காணி மற்றும் விவசாய அமைச்சு மீதான குழுநிலை விவாதம் திங்கட்கிழமை(14) நாடாளுமன்றில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அமைச்சர் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

கைவிட்டுச் சென்ற காணிகளுக்கு,1990ஆம் ஆண்டுக்கும் 2006ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் பதிவு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. 400 ஏக்கருக்கு அதிகமான வளமான காணிகள் முறைகேடாக பரிமாறப்பட்டுள்ளன.

காணி சொந்தகாரர்களிடமிருந்து பலவந்தப்படுத்தப்பட்டு ஆவணங்களில் கையொப்பம் பெறப்பட்டதாக முஸ்லிம்கள் கூறுகின்றனர்.

நீதியமைச்சரிடம் இன்னொரு வேண்டுகோளை முன்வைக்கின்றேன். அதாவது,இவ்வாறான காணி பிரச்சினையை தீர்ப்பதற்கென்று தனியான மத்தியஸ்;த சபைகள் நிறுவப்பட வேண்டும்.

அம்பாறை மாவட்டத்தில் வட்டமடு காணிகள் விவகாரம் பாரதூரமானது. அந்தக் காணிகளின் பரப்பளவு 1,742 ஏக்கர்களாகும்.அங்கு 600 குடும்பங்கள் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளன. அக்குடும்பங்களுக்கு 1970ஆம் மற்றும் 1974ஆம் ஆண்டுகளில் காணி அபிவிருத்தி கட்டளை சட்டத்தின் கீழ் காணிகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன.

1976ஆம் ஆண்டு விவசாயிகளுக்கும் அப்பகுதி குடியிருப்பாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகலால், அக்கரைபற்று வரி மதிப்பீட்டு பிரிவின் கீழ் வந்த 4,000 ஏக்கர் காணி, மேய்ச்சல் தரையாக பிரகடனப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், சுற்றாடல் அமைச்சர் சில நிபந்தனைகளுடன் வட்டமடுவிலுள்ள நெற்செய்கைக் காணிகளில் விவசாயம் செய்வதற்கு அனுமதி வழங்கியிருந்தார்.ஆனால், இப்பொழுது கூட்டுறவுச் சங்கத்தினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதேபோல்,பொத்துவிலில் பள்ளியடிவட்டை கரங்கோவா காணிகள் விவகாரமும் பாரதூரமானவை.அதற்கும் உரிய தீர்வு காணப்பட வேண்டும்.

மேலும்,மன்னார் மாவட்டத்தில் சிலாபத்துறையில் பொதுமக்களுக்குச் சொந்தமான நிலம், கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றது.யுத்த காலத்தில் கடற்படை அங்கு முகாமிட்டிருந்தது. இன்னும் நிலைமை நீடிக்கின்றது. எனவே, கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு வலியுறுத்தியதன் பிரகாரம், தனியார் காணிகளிலிருந்து அரச ஆயுதப் படைகள் வெளியேற்றப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.                                                                                                                                                                                                            
                                       
                                                             

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .