2025 மே 21, புதன்கிழமை

'போதைப் பொருளால் வருமானத்தைவிட இருமடங்கு செலவு'

Thipaan   / 2016 ஜூன் 01 , மு.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

பைஷல் இஸ்மாயில்

'எமது நாட்டைப் பொறுத்தவரையில், சிகரெட் மற்றும் மதுபான விற்பனையின் மூலம் பில்லியன் கணக்கில் வருமானம் கிடைக்கின்றது. எனினும், அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை விட இருமடங்கை, போதைப்பொருளுக்கு அடிமையாகிப் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு அரசாங்கம் செலவிடுகிறது' என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏல்.எல்.முஹம்மட் நஸீர், இன்று (01) தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சில் இடம்பெற்ற உயர் அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்;,

நாட்டில், மது, சிகரெட் மற்றும் போதைப் பொருட் பாவனை அதிகரித்து வருகின்றது. இதனால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் வருடந்தோறும் அதிகரித்து வருவதையே புள்ளிவிவரங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

புதிய அரசாங்கமானது போதைப் பொருட் பாவனையை இல்லாதொழிப்பதற்கும் மது மற்றும் சிகரெட் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்குமான நடவடிக்கைகளைத் தற்போது மேற்கொண்டு வருகின்றது.

தேசிய போதைப்பொருள் தடுப்பு நிகழ்ச்சித் திட்டத்தையும் போதைப் பொருள் தடுப்பு மாதத்தையும் பிரகடனப்படுத்தும் தேசிய தினத்தை, நேற்று (31) ஆரம்பித்து வைத்த அரசாங்கம், இந்த மது எதிர்ப்பு தினத்தை எதிர்வரும் 12ஆம் திகதி வரை முன்னெடுக்கவுள்ளது.

மேலும், எமது நாட்டையும் மக்களையும் சீரழித்துவரும் சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தக செயற்பாடுகளை ஒழிப்பதற்கு, கட்சி அல்லது அரசியல் பாகுபாடு இல்லாமல் அனைவரும் ஒன்றினைந்து செயற்பட வேண்டும்.

எமது நாட்டின் சனத்தொகையில், குறைந்த வருமானத்தை பெறுவோர், தமது வருமானத்தில் மூன்றிலொரு பங்கினை போதைப்பொருள் பாவனைக்காகச் செலவிடுகின்றனர்.

இன்று ஏனைய நாடுகளைப் போன்று எமது நாட்டிலும் அதிகரித்த வறுமை நிலைக்கு போதைப் பொருட் பாவனை மிகவும் முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றது.

15 வயது தொடக்கம் 25 வயது வரையானோரே, போதைப்பொருள் பாவனைக்கு அதிகம் அடிமையாகி வருகின்றனர். சுகாதார செயற்பாடுகளுள் ஒப்பீட்டளவில் இலங்கை முதலிடத்தில் உள்ளபோதும் போதைப் பொருள் பாவனை மூலம் சமூக கட்டமைப்புக்கள் மாற்றமடையக்கூடிய அச்சுறுத்தல் எமது நாட்டில் ஏற்பட்டுள்ளது.

இதிலிருந்து இன்றைய இளைய சமூதாயத்தினரை பாதுகாக்க வேண்டிய தேவை எமக்கு பாரிய பொறுப்புள்ளது. இதற்கான சகல நடவடிக்கைகளையும் இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால் நாம் ஒன்றினைந்து பாடுபட வேண்டும்' என அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X