2025 மே 22, வியாழக்கிழமை

'மோசடிகாரர்கள் மறைமுகமாக பொதுமக்களிடம் பிச்சை வாங்குகிறார்கள்'

Niroshini   / 2016 ஏப்ரல் 25 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தீசான் அஹமட்,எப்.முபாரக்,ஏ.எம்.ஏ.பரீத்  

ஊழல் மோசடிகாரர்கள் மறைமுகமாக பொதுமக்களிடம் பிச்சை வாங்குகிறார்கள் என ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் தெரிவித்தார்

கிண்ணியா பிரதேச சபை பகுதியில் வெள்ளிக்கிழமை  இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

முன்னாள் ஜனாதிபதி ஊடகங்களுக்கு கருத்தொன்றை தெரிவித்திருந்தார் “நான் நாட்டை கையளிக்கும் போது நாடு நல்லநிலையில் இருந்தது. ஒரு கேக் துண்டை நான் அவர்களிடம் கையளித்திருந்தேன். அதை சாப்பிடும் பணி மட்டுமே அவர்களுக்கு இருந்தது“ என்றார். ஆனால் அவர் நூறு ரூபாய் பெறுமதியான கேக் துண்டுக்கு ஆயிரம் ரூபாய் செலவுசெய்திருந்தார். அந்த கேக் துண்டு மிகவும் பழுதடைந்திருந்தது என்பது அவருக்கு தெரியாமலிருக்க வாய்ப்பில்லை

தற்போது ஊழல் மோசடி குற்றசாட்டுகளில் கைதுசெய்யப்பட்ட சிலரும் பிணையில் வெளியில் இருக்கிறார்கள். விசாரணைகள் இறுதிகட்டத்தை அடைந்தும் பலர் இன்னும் கைதுசெய்யப்படவில்லை. இவ்வாறான நிலை தொடர்ந்தால் நல்லாட்சி அரசாங்கத்தால் எதிர்வரும் தேர்தல்களில் வெற்றிபெற முடியாது என்று ஜனாதிபதி, பிரதமருக்கு நன்கு தெரியும்.

மோசடி செய்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்குவதால் மட்டும் நாட்டில் இருந்து ஊழலை முற்றுமுழுதாக அழிக்கமுடியாது. ஊழல் மோசடிகளை கட்டுபடுத்துவதற்கான செயற்திட்டம் அவசியம். கடந்த பத்து வருடங்களில் மாத்திரம் 2,000 கோடி அமெரிக்க டொலர் கறுப்புப் பணம் வெளிநாட்டு வங்கிகளில் முதலிட்டுள்ளதாக வோசிங்டன் க்ளோபல் பினான்சியல் இன்டக்கிரீட் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

அத்துடன் அண்மையில் கசிந்திருந்த பனாமா பத்திரத்திலுள்ள வரி எய்ப்பு செய்தவர்களின் பட்டியலில் இலங்கையர்களின் பெயரும் இடம்பெற்றிருக்கிறது

இவர்கள் மோசடி செய்த பணத்தால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை ஈடுகட்டவே பொதுமக்களின் மீது அதிக வரி சுமை சுமத்த நேரிடுகிறது. ஒருவைகையில் இவர்கள் மறைமுகமாக பொதுமக்களிடம் பிச்சை எடுக்கின்றனர் எனலாம்

மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்களுக்கு வழங்கப்படும் நியமனங்களை தவிர ஏனையே அனைத்து நியமனங்களும் சட்டவிரோதமானது என கூட்டு எதிர்கட்சியினரால் புதிய சட்டம் ஒன்று இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர் பொலிஸ்மா அதிபரின் நியமனங்கள் சட்டவிரோதமானது என்றால் உதய கம்மன்பில நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியும். உங்களுக்கு சாதகமாக தீர்வு வந்தால் நாங்கள் ஒன்றும் நீதிபதியை பதவியில் இருந்து தூக்கி எரியமாட்டோம். உங்கள் ஆட்சியை போன்றல்லாது சுயாதீன நீதித்துறையே எங்கள் ஆட்சியில் காணப்படுகின்றது.

விரைவில் இடம்பெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் வெற்றியை இது உறுதிசெய்யும். உள்ளூராட்சி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியை தோற்கடிப்போம் என சவால் விடுவதற்கு முன்னர் முடிந்தால் காலியில் இடம்பெறவுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மே தின கூட்டத்தில் அனைவரையும் கலந்துகொள்ளச் செய்யுங்கள் என டிலான் பெரேரா போன்றவர்களிடம் கூறிக்கொள்ள விரும்புகிறேன் என்றார்.

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .