2025 ஜூன் 28, சனிக்கிழமை

'கிழக்கு மாகாண சபை ஆட்சியை த.தே.கூ கைப்பற்றினால் எவரும் உதாசீனம் செய்யமுடியாத நிலை ஏற்படும்'

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 12 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                         (சி.குருநாதன்)
'கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தால் அல்லது கூடுதலான ஆசனங்களைக் கைப்பற்றினால் அது ஒரு திருப்பு முனையாக அமையும் என்றும் மற்றும் எவரும் எம்மை உதாசீனம் செய்ய முடியாத நிலை ஏற்படும் என்று முக்கிய வெளிநாடு ஒன்றின் தூதுவர் ஒரு சந்திப்பின்போது தெரிவித்தார்' என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

திருகோணமலை புறநகர் பகுதியான பாலையூற்று முருகன் கோவில் வீதியில் நடத்தப்பட்ட தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் பேசுகையில் இத்தகவலை வெளியிட்டார்.

அந்த வெளிநாட்டுத் தூதுவருடனான சந்திப்பு தாம் கொழும்பிலிருந்து நேற்று திருகோணமலைக்கு திரும்புவதற்கு முன்பாக கொழும்பில் நடைபெற்றது என்றும் சம்பந்தன் தெரிவித்தார்.

சம்பந்தன் மேலும் கூறியதாவது,

'தென்ஆபிரிக்க அரசின் தூதுக்குழு ஒன்றை தமிழ்;த் தேசியக் கூட்டமைப்பு தூதுக்குழு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது. சர்வதேச சமூகம் எம் பின்னால் உறுதியாக நிற்கின்றது என்றும் யுத்தத்தின் பின்னரான காலத்தில் நாம் நியாயமாக நடந்து கொண்டுள்ளோம்; என்றும் எம் பக்கத்தில் நியாயம் இருப்பதாக சர்வதேச சமூகம் தெரிந்து கொண்டுள்ளது என்றும் அந்த நம்பிக்கையைப் பாதுகாத்து எமது பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டியது  மது கடமை என்றும் தென்ஆபிரிக்க தூதுக்குழு சந்திப்பின்போது தெரிவித்தது.

சர்வதேசம் எம்மீது வைத்திருக்கும் நம்பிக்கை எப்போதும் இருக்கும் என்று நம்பிவிடக்கூடாது என்றும் எமக்குத் தெரிவிக்கப்பட்டது.

'கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் தங்கள் நிலைப்பாடான சுயாட்சி அதிகாரங்களை பெற வேண்டும் என்பதில் தமிழ் மக்கள் உறுதியாக இருக்கின்றார்களா என்பதை கிழக்கு மாகாண சபைத்தேர்தல் முடிவின் மூலம் அறிந்து கொள்வதில் சர்வதேசம் மிகவும் உன்னிப்பாக கவனிப்பதாகவும் ஆர்வத்துடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

' ஜெனிவா ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கூட்டத்தில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாக சர்வதேச சமூகத்தில் எழுப்பப்பட்டுள்ள அழுத்தம் தொடர்பான வினாக்களுக்கு விடையளிக்ககூடியதாக கிழக்கு தேர்தலில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் அரசாங்கத்தின் பின்னால் நிற்கின்றார்கள் என்பதை உலகுக்கு வெளிப்படுத்தவே கிழக்கு மாகாண சபைத்தேர்தல் நடத்தப்படுவதாக அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கொழும்பில் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் இத்தேர்தல் தொடர்பாக ஏற்கனவே வெளிவந்த ஊகம், உண்மை என்பதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

'எனவே கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் தமிழ் மக்கள் அரசாங்கத்தை நிராகரிக்கின்றார்கள் என்பதை சர்வதேச சமூகத்திற்கு எடுத்துக்காட்டவேண்டும். ஆளும் கட்சியை சேர்ந்த தமிழ் வேட்பாளர் ஒருவர் கூட வெற்றியீட்டாத நிலையை ஏற்படுத்த வேண்டும். மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் உள்ள ஆசனங்களில் 4 இல் 3 பங்கை அதாவது 21 ஆசனங்களில் 13 ஆசனங்களையும்; அம்பாறை மாவட்டத்தில் குறைந்தது 2 ஆசனங்களையும் பெற்று மாகாணத்திலேயே ஆகக் கூடுதலான வாக்குகளை பெற்ற பெரும்பான்மை கட்சி என்ற அந்தஸ்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற வேண்டும்.

அப்போது கிடைக்கும் இரண்டு போனஸ் ஆசனங்களையும் சேர்த்தால் மாகாணத்திலேயே ஆகக்கூடுதலான ஆசனங்களை பெற்ற கட்சியாக கூட்டமைப்பு வரும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு கணிசமான ஆசனங்களும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஓரளவு ஆசனங்களும் கிடைக்கும் பட்சத்தில் கிழக்கு மாகாணத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைக்கக் கூடிய நிலை உருவாகலாம். அவ்வாறு கிடைக்கக்கூடிய வாய்ப்பை நாம் இழந்து விடக்கூடாது' என்றும் சம்பந்தன் தெரிவித்தார்.

இதன்போது திருமலை மாவட்ட முதன்மை வேட்பாளர் சி.தண்டாயுதபாணி மற்றும் வேட்பாளர்களும் உரையாற்றினர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .