2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

மக்களின் விருப்பங்களை நிறைவேற்றக்கூடிய முதலமைச்சரே கிழக்கில் தேவை: சம்பந்தன்

A.P.Mathan   / 2012 ஓகஸ்ட் 12 , பி.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சி.குருநாதன்)


ஜனாதிபதியின் விருப்பத்திற்கு ஏற்றவாறு செயற்படும் முதலமைச்சர் கிழக்கு மாகாண சபைக்கு தேவையில்லை. மக்களின் விருப்பங்களை நிறைவேற்றக்கூடிய முதலமைச்சரே கிழக்கு மாகாண சபைக்கு தேவையாகும். அதன் காரணமாகத்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுகின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை திருகோணமலை பிரதேசத்தில் உள்ள பொதுநல மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலில் உரையாற்றும்போதே சம்பந்தன் இதனைத் தெரிவித்தார்.

திருமலை நியூ சில்வர் ஸ்டார் ஹோட்டலில் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பான கொள்கை விளக்கக் கலந்துரையாடல் மற்றும் வேட்பாளர் அறிமுகமும் நடத்தப்பட்டது. திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளையின் தலைவருமான க.துரைரெட்ணசிங்கம் தலைமை வகித்தார்.

சம்பந்தன் தனது உரையில் ஒருமித்த நாட்டுக்குள் நிலையானதும் நிலைத்து நிற்கக்கூடியதுமானதும் நியாயமானதுமான அரசியல் தீர்வு ஒன்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி காணும்படி அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகள் மற்றும் இந்தியா ஆகியன இலங்கை அரசாங்கத்துக்கு தெளிவாக வற்புறுத்தியுள்ளன. சர்வதேச சமூகம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பின்னால் நிற்கின்றது என்பது இலங்கை அரசாங்கத்திற்கு நன்றாக தெரியும். இந்த நிலையில் தான் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் தமக்கு பின்னால் அணிதிரண்டு நிற்கின்றார்கள் என்பதை காட்டி சர்வதேச சமூகத்தை திசை திருப்பும் நோக்குடன் கிழக்கு மாகாண சபைத் தேர்தலை ஒரு வருடத்திற்கு முன்பதாக இலங்கை அரசாங்கம் நடத்துகின்றது. அரசாங்கத்தின் இத்தந்திரோபாயத்தை கிழக்கு மாகாண தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தனிப்பெரும் கட்சியாக எதிர்வரும் தேர்தலில் தெரிவு செய்வதன் மூலம் முறியடிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

திருமலை மாவட்ட முதன்மை வேட்பாளர் சி.தண்டாயுதபாணி மற்றும் வேட்பாளர்களான டாக்டர் திருமதி இந்துராணி தர்மராஜா, க.கோணேஸ்வரன், ச.அந்தோனிப்பிள்ளை, ந.குமணன், ஜெ.ஜெனார்த்தனன், கு.இரத்தினகுமார், ச.விஜேகாந்த் ஆகியோரும் உரையாற்றினர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X