2025 ஜூன் 28, சனிக்கிழமை

சர்வதேச சமூகத்தின் சிந்தனையை பலவீனப்படுத்துவதாக கிழக்கு தமிழ் மக்களின் தீர்ப்பு அமைந்து விடக்கூடாது:

Super User   / 2012 ஓகஸ்ட் 16 , பி.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


                                                                                  
                                                                                           (சி.குருநாதன்,ரமன்)


"இலங்கை இனப்பிரச்சினைக்கு நிலைத்து நிற்கக்கூடியதும் நியாயமானதும் நடைமுறைப்படுத்தப்படக்கூடியதுமான அரசியல் தீர்வு ஒன்றை காண வேண்டும் என்பதில் சர்வதேச சமூகம் முனைப்பாக இருக்கின்றது. கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் தமிழ் மக்கள் சிந்தித்து வாக்களித்தால் இத்தேர்தல் நிச்சயம் ஒரு திருப்பு முனையாக அமையும் என்று நாம் கொழும்பில் சந்தித்த வெளிநாடுகளின் ராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர். சர்வதேச சமூகத்தின் இச்சிந்தனையை  பலவீனப்படுத்துவதாக கிழக்கு மாகாணத்தமிழ் மக்களின் தேர்தல் தீர்ப்பு அமையக்கூடாது" என்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்புத்தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

திருகோணமலை பிரதேச செயலக பிரிசிவ் உள்ள ஆனந்தபுரி விளையாட்டு மைதானத்தில் இன்று வியாழக்கிழமை மாலை நடைபெற்ற தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பிரசாரக்கூட்டத்தில் உரையாற்றுகையில் சம்பந்தன் இவ்வாறு தெரிவித்தார்.

யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமான மாவை சேனாதிராசா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உட்பட திருகோணமலை மாவட்ட வேட்பாளர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினர்.

சம்பந்தன் அங்கு மேலும் உரையாற்றுகையில் "மட்டக்களப்பு மாவட்டத்தில்  கதிரவெளி, களுவாஞ்சிக்குடி மற்றும் சித்தாண்டி ஆகிய இடங்களில் பல பிரசாரக்கூட்டங்களில் பங்குபற்றி உரையாற்றினேன.; மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் மிகவும் உறுதியாக இருக்கின்றார்கள். இச்சந்தர்;ப்பத்தை இழக்கக்கூடாது. இது கடவுளால் தரப்பட்ட சந்தர்ப்பம் என்று மட்டக்களப்பு தமிழ் மக்கள் நினைக்கின்றார்கள்.

இலங்கை அரசாங்கம் அதிகபட்ச அதிகாரத் தீர்வு எதனையும் தமிழர்களுக்கு வழங்க விரும்பவில்லை. இந்தத் தேர்தல் கடவுளினால் எமக்குத் தரப்பட்ட சந்தர்ப்பம் ஆகும். நீதி, நியாயத்தில் வெற்றி பெற  வேண்டும் என்பது இறைவனின் விருப்பம். இதனை சரியாக முகங்கொள்ள வேண்டியது நம் அனைவரினதும் கடமை ஆகும்.  கிழக்கில் வெற்றி பெற்று அந்த ஐனநாயகத் தீர்ப்பை துஷ்பிரயோகம் செய்ய அரசாங்கம் முயற்சிக்கின்றது. அதற்கு நாம் துணைபோகப்போகின்றோமா?'

தந்தை செல்வாவின் வழியில் நாங்கள் கண்ணியமான, நிதானமான வழியில் சென்றுகொண்டிருக்கின்றோம். அதன் மூலம் நிலைத்து நிற்கும் நிரந்தர தீர்வைப்பெற நாங்கள் விழைகின்றோம்.

இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்க ஆணைக்குழு சிபாரிசில் கூறப்பட்டுள்ளது அதிகபட்ச அதிகாரத்துடன் கூடிய அரசியல் தீர்வு வழங்கப்படவேண்டும் என்பதாகும். அதனை அடியொற்றி ஜெனீவாத் தீர்மானம் கூறுகின்றது நல்லிணக்க ஆணைக்குழு சிபாரி;சை நடைமுறைப்படுத்த ஒரு செயல்முறைத்திட்டத்தை இலங்கை அரசாங்கம்  முன்வைக்கவேண்டும் என்று.

ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினால் ஏற்பட்டுள்ள சர்வதேச அழுத்தத்தில் இருந்து விடுபட, கிழக்கு மாகாணசபையை நாம் வெற்றி பெறவேண்டும் என்று அரசாங்கத்தின் அமைச்சர்கள் இப்போது பகிரங்கமாகவே கூறுகின்றனர். இதனை நாம் அனுமதிக்கமுடியுமா? சர்வதேச சமூகத்தின் தமிழர்களுக்கு சார்பான சிந்தனையை நாம் இந்தத் தேர்தல் மூலம் பலப்படுத்தப்போகின்றோமா? அல்லது பலவீனப்படுத்தப்போகின்றோமா?'

திருகோணமலையிலும் மட்டக்களப்பிலும் நாம் அறுதிப் பெரும்பான்மை ஆசனங்களை வெற்றிகொள்ள வேண்டும். இதனை நாம் அடைந்தால் நிச்சயம் மாகாண அதிகாரத்தை நாம் பெற்றுக்கொள்ளமுடியும். அதன் மூலம் சர்வதேசத்திற்கு நாம் தெளிவான ஒரு செய்தியை கூறமுடியும். ஐனநாயக முடிவைத்தவிர பலம் வாய்ந்த முடிவு வேறு ஏதும் இல்லை.

கிழக்கில் வாழும் முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் ஒரே வகையான நிலப்பிரச்சினை, வணக்கஸ்தல பிரச்சினை,  கலாசார விடயங்கள் ஆகியன காணப்படுகின்றன. எனவே இங்குள்ள முஸ்லிம்கள் தமிழர்களுடன் இணைந்து செயற்படவே விரும்புவர். மாகாண முறை நிர்வாகம் தமிழர் போராட்டத்தினால் வந்த ஒன்று என்பது முஸ்லிம் மக்களுக்கு தெரியும். மாகாண முறைமையானது முழுமையானது அல்ல. ஆனால் அர்த்தபுஷ்டியான அதிகாரத்தைக்கொண்டு அது கட்டியெழுப்பப்படவேண்டும்

கிழக்கு மாகாண சபையை கலைக்கும்போது தமது கட்சியுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து போட்டியிடும் என்று ஜனாதிபதி நினைத்தார். கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் மக்களின் எதிர்ப்பு காரணமாக தனித்து போட்டியிட வேண்டிய நிலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு ஏற்பட்டது. இதனால் ஆளும் கட்சி தனித்து கிழக்கில் போட்டியிட வேண்டியதாயிற்று. இது நீதி மற்றும் நியாயம் நிலை நாட்டப்பட வேண்டும் என்பதற்காக மேற்கொள்ளப்பட்ட  இறைவன் செயலாகும்" என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .