2025 ஜூன் 28, சனிக்கிழமை

கரிமலையூற்று பள்ளிவாயல் மக்களிடம் மிக விரைவில் மீளக் கையளிக்கப்படவுள்ளது என்பது உண்மைக்குப் புறம்பான

Super User   / 2012 ஓகஸ்ட் 26 , பி.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                            (ரமன்)

திருகோணமலை கரிமலையூற்று பள்ளிவாயல், பிரதேச முஸ்லிம் மக்களிடம் மிக விரைவில் மீளக் கையளிக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் திருகோணமலையில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் நஜீப் அப்துல் மஐPத் கூறியுள்ள கருத்து முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு தெரிவான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் அப்துல் லத்தீப் மொகமட் பசீர் கூறினார்.

இது பிரதேச முஸ்லிம் மக்களை பிழையான வகையில் திசை திருப்பும் கபட நாடகம் எனவும் இதனை பிரதேசத்தின் மக்கள் பிரதிநிதி என்ற வகையில் தான் வன்மையாக கண்டிப்பதாகவும் அப்துல் லத்தீப் மொகமட் பசீர் தமிழ் மிரருக்கு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும்கூறுகையில்,

"கடந்த எட்டு மாதங்களுக்கு முன்னர் நானும், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கும் கரிமலையூற்று பள்ளிவாயல் தொடர்பில் அப்பிரதேசத்திற்கு பொறுப்பான இராணுவ அதிகாரி வெயாங்கொட என்பவருடன் பேசினோம். எமது பேச்சுவார்த்தையின் பயனாக சென்ற ஜனவரி நடுப்பகுதியில் பள்ளிவாயலை பிரதேச முஸ்லிம் மக்களிடம் மீளக்கையளிக்க இணக்கம் காணப்பட்டது. எனினும் அதனை அடுத்து வந்த ஒரு சில வாரங்களின் பின் திருகோணமலைக்கு பாதுகாப்பு தரப்பின் அதிஉயர் அதிகாரியொருவர் வந்து சென்றார். அடுத்த நாள் கரிமலையூற்று பள்ளிவாயலின் பின்புறத்தில் அமைந்துள்ள கடற்கரையில் பன்னெடுங்காலமாக கரைவலைத்தொழில் செய்து வந்த மீனவர்களின் கரைவலைத்தொழிலுக்கான அனுமதி முற்றாக மறுக்கப்பட்டது.

இந்நிலையில் பள்ளிவாயல் விடயம் மற்றும் கரைவலை மீன்பிடி விடயம் என்பன பற்றி மீளவும் நானும், எம்.எஸ்.தௌபீக்கும் இராணுவ அதிகாரி வெயாங்கொடவிடம் வினவிய போது பள்ளிவாயலை இப்போதைக்கு வழங்க வேண்டாம் என்று உயர் மட்டத்தில் இருந்து உத்தரவொன்று கிடைத்துள்ளதாக அவர் எங்களிடம் கூறினார். இது முன்னர் ஏற்பட்டிருந்த இணக்கத்திற்கு முற்றிலும் மாறானதாக இருந்தது. பின்னர், இராணுவ அதிகாரி வெயாங்கொடவும், மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி அஜித் வீரசேகரவும் திருகோணமலையில் இருந்து இடமாற்றம் பெற்றுச்சென்றனர்.'

புதிதாக 22ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதியாக திருகோணமலை மாவட்டத்திற்கு பிரிகேடியர் மகிந்த ஜெயசூரிய நியமிக்கப்பட்டார்.  அவருடன் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கும், நானும் நேரில் சென்று மேற்படி விடயங்கள் பற்றிப்பேசினோம். அப்போது கிழக்கு மாகாண இராணுவத் தளபதியுடன் பேசி ஒரு தீர்வை தாம் பெற்றுத்தருவதாக அவர் கூறினார். எனினும், ஜூன் மாத ஆரம்பத்தில் மீண்டும் அவரிடம் நாங்கள் வினவியபோது மேலிடத்திலிருந்து இவ்விடயம் தொடர்பில் எதுவித பதிலும் தனக்கு கிடைக்கவில்லை என அவர் கூறினார்.

இத்தகைய நிலையில்தான் அமைச்சர் ரிசாட் பதுர்தீன், நாடாளுமன்ற உறுப்பினர் யுனைஸ் பாரூக்கு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமீர் அலி ஆகியோர் கரிமலையூற்று பள்ளிவாயலை பார்வையிட வந்தனர். எனினும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் உட்பட அரசியல் உயர்மட்டத்தவர்களான அம்மூவரையும் இராணுவ சிப்பாய்கள் மூவர் பள்ளிவாயல் பகுதிக்குள் செல்ல விடாது இரண்டு மணிநேரம் தடுத்ததுடன் திருப்பியும் அனுப்பினர். அப்போது அமைச்சர் ரிசாட் பதூர்தீனால் எதுவுமே செய்ய முடியவில்லை.'

ஒரு சில வாரங்களுக்கு முன்னர் கரிமலையூற்றுப் பகுதிக்கு வந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நஐPப் அப்துல் மஐPத் ஆகியோர் ஒன்றரை மணிநேரம் அங்கு காவற்கடமையில் இருந்த படையினருடன் பேசி கடும்பிரயத்தனத்தின் பின்னர் பள்ளிவாயலை பார்வையிட அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு பள்ளிவாசலை பார்வையிட மட்டுமே அப்போது அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் பள்ளிவாயல் மீண்டும் பிரதேச மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது, அது தங்களது முயற்சியினால் நடந்து விட்டது என்ற தொனியில் நஐPப் அப்துல் மஜீத்மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்வர் ஆகியோர் அறிக்கை விட்டனர்.

ஆனால் இன்று வரையில் கரிமலையூற்று பள்ளிவாயல் எமது பிரதேச மக்களிடம் கையளிக்கப்படவில்லை என்பதே மிகத் துல்லியமான உண்மையாகும். எனவே எமது மக்களை திசை திருப்பும் கபட நாடகங்களை நடத்த வேண்டாம் என பிரதேசத்தின் மக்கள் பிரதிநிதி என்ற வகையில்  உரியவர்களை வினயமாக கேட்டுக்கொள்கின்றேன்" என்றார்.

இதேவேளை, கரிமலையூற்று பள்ளி தொடர்பில் அப்துல் லத்தீப் மொகமட் பசீர்  தெரிவித்த கருத்து தொடர்பில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்; நஜீப்; அப்துல் மஜீத்திடம் தமிழ் மிரர் கேட்டபோது, பாதுகாப்பு தரப்பினருடன் அரசாங்க உயர்மட்டத்தினருடம் பேசி, பள்ளிவாசலை மிகவிரைவில் பிரதேச முஸ்லிம் மக்களிடம் கையளிக்க தான் முயற்சிகளை  எடுத்து வருவதாகவே தான் தெரிவித்ததாக அவர் கூறினார்.

இது தொடர்பாக நஜீப் அப்துல் மஜீத் மேலும் கூறுகையில், "2007 ஆம் ஆண்டில் நாடாளுமன்ற உறுப்பினருக்கான நிதியொதுக்கீட்டிலிருந்து இப்பள்ளிவாசலுக்காக 5 லட்சம் ரூபாவை வழங்கினேன். அதன் அடிப்படையில் அப்பள்ளிவாசல் திருத்தவேலைகளுக்கு   உட்பட்டது. எனினும் தற்போதும் இப்பள்ளிவாசல் பூரண திருத்த வேலைகளுக்கு உட்படுத்தப்பட  வேண்டியுள்ளது. அதன் பின்னரே இது தொழுகைக்கு பயன்படுத்தப்படக்கூடிய நிலைமை ஏற்படும்" என்றார்.

பாதுகாப்பு தரப்பினருடனும் அரசாங்க உயர்மட்டத்தினருடம் பேசி, இப்பள்ளிவாசலை மிகவிரைவில் பிரதேச முஸ்லிம் மக்களிடம் கையளிக்க தான் முயற்சிகளை  எடுத்து வருவதாகவும் ஆனால் இதற்கான கால எல்லையை தன்னால் குறிப்பிட முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .