2025 மே 10, சனிக்கிழமை

புல்மோட்டை காணி பிரச்சினைக்கு விரைவில் தீர்வு: அமைச்சர் ஹக்கீம்

Super User   / 2013 மார்ச் 18 , பி.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


புல்மோட்டை பிரதேச மக்களின் குடியிருப்பு மற்றும் பயிர்ச்செய்கை நிலங்கள் கடற்படை அதிகாரிகளால் ஆக்கிரமிக்கப்படுவதற்கு விரைவில் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இந்த உறுதிமொழியினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சரும் ரவூப் ஹக்கீம் வழங்கியுள்ளார்.

திருகோணமலை, புல்மோட்டைப் பிரதேசத்தில் முஸ்லிம்களின் குடியிருப்பு மற்றும் பயிர்ச் செய்கைக் காணிகளை அபகரிக்கம் முயற்சிகள் தற்பொழுது உக்கிரமடைந்துள்ளன.

இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள புல்மோட்டை பிரதேச குக்கிராமங்களைச் சேர்ந்த விவசாய, மீன்பிடி தொழில்களில் ஈடுபட்டுவரும் வறிய மக்களின் சார்பில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சரும் ரவூப் ஹக்கீமின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

இது தொடர்பாக நேரில் கண்டறிந்து உரிய தீர்வினை  காண்பதற்காக அமைச்சர் ஹக்கீம் கடந்த சனிக்கிழமை புல்மோட்டைக்கு பகுதிக்கு விஜயம் மேற்கொண்டார்.

இதன்போதே நிலங்கள் அக்கிரமிக்கப்படுவதற்கு விரைவில் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என உறுதிமொழி வழங்கினார்.

அத்துடன், இது தொடர்பில் காணி அமைச்சருடனும் கடற்படை தளபதியுடனும் மாவட்ட செயலாளர், மாவட்ட காணி ஆணையாளர், வன பரிபாலன திணைக்களம், கரையோர பாதுகாப்புத் திணைக்களம் ஆகியவற்றின் உயரதிகாரிகள் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த விவகாரத்தை ஜனாதிபதியின கொண்டு செல்லவுள்ளதாகவும் நீதி அமைச்சர் தெரிவித்தார்.

முஸ்லிம்களின் குடியிருப்பு மற்றும் பயிர்ச்செய்கை நிலங்கள் காணப்படும் கொக்கிளாய் கடற்படை முகாமை அண்டிய பிரதேசத்திற்கு அப்பகுதி அரசியல் பிரமுகர்கள் மற்றும் முக்கியஸ்தர்களுடன் சென்ற அமைச்சர் ஹக்கீம் நிலைமையை நேரில் அவதானித்தார்.

பின்னர் புல்மோட்டை ஜும்மாப் பள்ளிவாசலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒன்றுகூடலின் போது மக்கள் மத்தியில்; உரையாற்றினார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

"மத்திய அரசின் காணி அமைச்சரை அல்லது அவரால் உத்தரவாதப்படுத்தப்படும் உயர் அதிகாரியை இங்கு அழைத்து வந்து சம்பந்தப்பட்ட ஏனைய தரப்பினரையும் வரவழைத்து இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்படும்.

படையினருக்கு தேவைப்படுகின்ற போதெல்லாம் மக்கள் பல நெருக்கடிகளுக்கு மத்தியில் மிகுந்த விட்டுக்கொடுப்புகளை பல தடவைகள் செய்துள்ளனர்.  இதற்கு அப்பால் இன்னும் நெருக்கடிகள் தொடர்வது சகித்துக் கொள்ள முடியாத ஒரு நிலைமைக்கு அவர்களைத் தள்ளியிருக்கிறது.

இந்த நிலைமையில் இந்த விவகாரம் ஓர் ஆர்ப்பட்டத்தில் முடியாமல் அரசியல் ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் இதற்கான தீர்வுகளை காணப்பதற்கான பொறுப்பு எங்களுக்கு உள்ளது.

இதற்கான உடனடித் தீர்வாக ஏற்கனவே நடைபெற்றுள்ள காணிக் கச்சேரிகளில் தீர்மானிக்கப்பட்ட உத்தரவுப் பத்திரங்களை உரியவர்களுக்கு தாமதமின்றி பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

இந்த விவகாரத்தை நீடிக்க விடுவது பொறுப்பு வாய்ந்த ஓர் அரசாங்கத்திற்கு நல்லதல்ல. இதனை தனியே முஸ்லிம்களுக்கு மட்டும் உரிய பிரச்சினையாக நோக்காது மற்றைய சமூகத்தினரும் அங்கலாய்கக் கூடிய பிரச்சினையாக இருந்தால் அவர்களுக்கும் தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்" என்றார்.

நில வளமும், கடல் வளமும் நிறைந்து காணப்படும் புல்மோட்டைப் பிரதேசத்திலுள்ள சபா நகர், தேத்தாவாடித்தீவு, பொன்மலைகுடா, பட்டிக்குடா, 13ஆம் கட்டை, மண்கிண்டிமலை, கொக்கிளாய் கரையோரப் பிரதேசங்களில் முஸ்லிம் மக்கள் வெகு நீண்டகாலமாக வசித்தும் பயிர்ச்செய்கையிலும் ஈடுபட்டும் வருகின்றார்கள்.

இவ்வளவு காலமாக இங்கு தொழில்துறைகளில் ஈடுபட்டு வந்த மக்களுக்கு தற்பொழுது தமது அன்றாடத் தொழிலை நிம்மதியாக மேற்கொள்ள முடியாமல் கடற் படையினர் தடைவிதித்துள்ளனர்.

'இது கடற்படைக்குச் சொந்தமான காணி' எனக் குறிப்பிட்டு 'இங்கு யாரும் பிரவேசிக்கக்கூடாது' என அறிவிப்புப் பலகைகளை அங்குள்ள மரங்களில் காட்சிப்படுத்தியுள்ளனர். அத்துடன் குடியிருப்பாளர்களின் குடும்பத்தினர்களை கடற்படைத் தரப்பினர் அடிக்கடி அச்சுறுத்தி வருவதாகவும் அமைச்சரிடம் பாதிப்புக்குள்ளான மக்கள் முறையிட்டனர்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X