2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

நிலாவெளி தமிழ் மகா வித்தியாலய முஸ்லிம் மாணவியர் பிரச்சினைகளை தீர்க்க கோரிக்கை

Super User   / 2013 ஜூலை 09 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிலாவெளி தமிழ் மகா வித்தியாலயத்தில் முஸ்லிம் மாணவியர் பர்தா அணிவதில் உள்ள பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இம்ரான் மஹ்ரூபினால்  மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் எஸ். தண்டாயுதபாணிக்கு விடுக்கப்பட்டள்ளது.

இது தொடர்பாக எஸ். தண்டாயுதபாணிக்கு மாகாண சபை உறுப்பினர் அனுப்பியுள்ள கடிதத்திலேயே இந்த கோரிக்கை விடுத்துள்ளார். குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"திருகோணமலை கல்வி வலயத்தின் நிலாவெளி தமிழ் மகா வித்தியாலயத்தில் முஸ்லிம் மாணவியர் தமக்கான கலாசார சீருடையை பாடசாலைக்குள் அணியக்கூடாது என்று தடைசெய்த விவகாரம் தற்போது பூதாகரமாக விஸ்வரூபம் எடுத்துள்ளது என்பதை தாங்கள் அறிவீர்கள் என்று நம்புகிறேன்.

ஓவ்வொரு இனத்துக்கும் தனித்துவமான கலாசார பண்புகள் இருப்பது போல முஸ்லிம்களுக்கும் இருக்கின்றது. அந்த வகையில் முஸ்லிம் பெண்களின் உடை விவகாரம் முக்கியமானது. இதனால் அரசாங்கமும் இலவச சீருடையின் போது பர்தாவுக்கென மேலதிகத் துணியை முஸ்லிம் மாணவிகளுக்கு வழங்கி வருகின்றது.

இப்படியான ஒரு சூழ்நிலையில் நிலாவெளி தமிழ் மகா வித்தியாலய நிர்வாகத்தினால் முன்னெடுக்கப்பட்ட கலாசார சீருடைத் தடையானது தமிழ் - முஸ்லிம் உறவில் விரிசலை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சத்தை எனக்கு ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் வாழ்கின்ற தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் தமக்குள் ஒற்றுமையாக வாழ்வதன் மூலமே நமக்கான உரிமைகளை பெற முடியும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

இதனைத் தாங்களும் ஏற்றுக் கொள்வீர்கள் என நம்புகிறேன். எனவே, இவற்றைக் கருத்தில் கொண்டு இந்த விவகாரத்தில் தாங்கள் தலையிட்டு இப்பிரச்சினையை சுமுகமாகத் தீர்த்துக்கொள்ள ஒழுங்குகள் செய்யுமாறு தயவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

தாங்கள் மாகாணக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றிய அனுபவமுள்ளவர் என்ற வகையில் இவ்விவகாரத்தை தங்களால் சிறப்பாகக் கையாள முடியும் என்று நம்புகிறேன்".

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .