2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

சலுகைகள் வழங்கப்படுவதில்லை: கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் முறைப்பாடு

Super User   / 2013 ஜூலை 14 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-றிப்தி அலி

கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கான சலுகைகள் உரிய முறையில் வழங்கப்படுவதில்லை என முறையிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் நேற்று சனிக்கிழமை இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் தவிர்ந்த ஆளும் கட்சி உறுப்பினர்கள் கடந்த இரண்டு மாதங்களாக சபை அமர்வுகளை பகிஷ்கரித்து வருகின்றனர். இது தொடர்பில் ஆராய்வதற்கான விசேட கூட்டமொன்று கண்டியிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், றிசாட் பதியுதீன், ஏ.எல்.எம்.அதாவுல்லா, கிழக்கு ஆளுநர் மொஹான் விஜேயவிக்ரம, முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் மற்றும் மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது மாகாண சபை உறுப்பினர்களின் பிரச்சினைகளை தெரிவிக்குமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார். இதனையடுத்து எரிபொருள் படி மற்றும் மாதாந்த மேலதிகக் கொடுப்பணவு ஆகிய வழங்கப்படுவதில்லை என மாகாண சபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மாகாண அமைச்சரவையினால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் கிழக்கு மாகாண ஆளுநர் அங்கீகாரம் வழங்கிவில்லை எனவும் முறையிட்டுள்ளனர். ஏனைய மாகாணங்களை போன்று இந்த செயற்பாடு கிழக்கு மாகாணத்திலும் மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

"கிழக்கு மாகாணம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். இதற்கான முழுப் பொறுப்பும் முதலமைச்சர் உட்பட மாகாண அமைச்சர்களின் கைகளிலேயே உள்ளது. மாகாண அமைச்சர்களின் கீழுள்ள திணைக்களங்களுக்கு மாகாண அமைச்சர்களே பொறுப்பாகும். இதனால் மாதந்தம் குறித்த திணைக்கள தலைவர்களுடனான கூட்டங்களில் அமைச்சர் கலந்துகொள்ள வேண்டும்" என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன் மாகாண சபை சுமூகமாக இடம்பெற்றுவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
எனினும், இந்த கூட்டத்தில் வட மாகாண சபை தேர்தல் குறித்தோ 13ஆவது திருத்தச் சட்டமூலம் குறித்தோ கலந்துரையாடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த கூட்டம் இடம்பெறுவதற்கு முன்னர் கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் பாங்கு சொல்லப்பட்டு நோன்பு திறக்கு நிகழ்வு இடம்பெற்றதுடன் தொழுகையும் இடம்பெற்றது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .