2025 ஜூன் 26, வியாழக்கிழமை

பட்டதாரி நியமனத்தில் பல்வேறு குளறுபடிகள்: இம்ரான் மஹ்ரூப்

Super User   / 2013 டிசெம்பர் 24 , மு.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை மாவட்டத்தில் வழங்கப்பட்ட பட்டதாரி நியமனத்தில் பல்வேறு குளறுபடிகள் காணப்படுகின்றன என ஐக்கிய தேசிய கட்சியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.

இந்த அரசாங்கம் வழங்கியுள்ள பட்டதாரி நியமனத்தின் மூலம் பட்டதாரிகள் அடைந்த சந்தோசத்தை விட மனதில் சுமந்த வேதனைகளே மிக அதிகமாகக் காணப்படுகின்றன எனவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"திருகோணமலை மாவட்ட பட்டதாரிகளுக்கு கடந்த திங்கட்கிழமை நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இந்த வகையில இறுதியாக நிரந்தர நியமனம் வழங்கப்பட்ட மாவட்டம் என்ற பெருமை திருகோணமலைக்கு கிடைத்துள்ளது.  இண்டு மாதங்களுக்கு முன் ஒரு தொகுதி நிரந்தர நியமனக் கடிதங்கள் திருகோணமலை மாவட்ட செயலகத்திற்கு கிடைத்துள்ள போதிலும் அவை வழங்கப்படாமல் அலுமாரியில் பூட்டி வைக்கப்பபட்டிருந்தன.

மாவட்ட அரசியல் அழுத்தங்களே இதற்கு காரணம் எனக் கூறப்படுகின்றது. திருகோணமலை மாவட்டத்தில் வழங்கப்பட்ட பட்டதாரி நியமனத்தில் பல்வேறு குளறுபடிகள் காணப்படுகின்றன. ஒரே நாளில் பயிலுனராகக் கடமையேற்ற பலருக்கு நிரந்தர நியமனம் அமுலாகும் திகதி வௌ;வேறாக வழங்கப்பட்டுள்ளன. இது எந்த அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது என்ற வினாவுக்கு எந்த ஒரு பட்டதாரியாலும் விடை காண முடியாதுள்ளது.

சிலர் குறித்த ஒரு அமைச்சின் கீழ் கடமையாற்றுகின்ற போது வேறொரு அமைச்சுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதேபோலவே ஒரு அலுவலகத்தில் கடமையாற்றும் சிலருக்கு வேறொரு அலுவலகத்திற்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

பட்டதாரி பயிலுனர் சேவையில் இருந்து ஏற்கனவே விலகி வேறு தொழில்களுக்கு சென்றோருக்கும் நிரந்தர நியமனக் கடிதம் அனுப்பப்பட்ட அதேவேளை தற்போது பயிலுனராக உள்ள பலருக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை. கேட்டால் வரும் என்று சொல்லப்படுகின்றதே தவிர எப்போது என்ற பதில் இல்லை. இன்னும் சிலரது பெயர் மற்றும் முகவரி என்பன பிழையாக குறிப்பிடப்பட்டுள்ளன.

இவற்றைத் திருத்துவதற்கு பொது நிர்வாக அமைச்சுக்கு செல்ல வேண்டும் எனப் பட்டதாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. பயிலுனர் நியமனம் வழங்கப்பட்ட காலத்திலிருந்து சரியான இருக்கை வசதி இவர்களுக்கு செய்யப்படாததால் பட்டதாரிகள் பலர் மர நிழல்களில் காலம் கழித்த வரலாறுகள் நிறையவே உண்டு.

சில அலுவலகங்களில் பட்டதாரிகள் வேண்டாதவர்களாக பார்க்கப்பட்டதால் அலுவலகப் பணியாளர்கள் கூட மதிக்காத அசௌகரியங்களை அனுபவித்த சம்பவங்களும் பலருக்கு உண்டு. ஆளணிப் பட்டியல் உருவாக்கப்பட்டு அதற்கேற்ப நியமனம் வழங்குவதுதான் இந்த நாட்டில் பின்பற்று வந்த மரபு முறையாகும்.

ஆனால் இந்த் பட்டதாரிகள் நியமனத்தில் நியமனம் வழங்கப்பட்ட பின்பே ஆளணிப் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வளவு பிரச்சினைகளுக்கும் அடிப்படைக் காரணம் இதுதான். மொத்தத்தில் அரசாங்கத்தின் இந்தப் பட்டதாரி நியமனத்தினால் பட்டதாரிகள் அடைந்த சந்தோசத்தை விட அனுபவித்த துன்பங்களே ஏராளமாகக் காணப்படுகின்றன.

பயிலுனர் நியமனம் வழங்கி 18 மாதங்கள் கழிந்தும் சரியான நியமனக் கடிதம் வழங்க முடியாத அளவுக்கு நமது நாட்டின் பொது நிர்வாகம் பின்தள்ளப்பட்டுள்ளது என்பது வேதனை தரும் விடயமாகும்" என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .