2026 மார்ச் 27, வெள்ளிக்கிழமை

வெள்ளம் காரணமாக மட்டு., திருமலை மாவட்டங்களில் இடம்பெயர்வு

Kanagaraj   / 2014 டிசெம்பர் 21 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ.ஹ§ஸைன்;, எஸ்.சபேசன், எஸ்.சசிக்குமார்


கிழக்கு மாகாணத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவந்த அடை மழையில்  ஏற்பட்ட வெள்ளம் காரணமாக  மட்டக்களப்பு மாவட்டத்தில் 2,919 குடும்பங்களைச் சேர்ந்த 9,942 பேரும்; திருகோணமலை மாவட்டத்தில் 1,122 குடும்பங்களைச் சேர்ந்த 3,980 சனிக்கிழமை (20) இடம்பெயர்ந்தனர். 


வெள்ளம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுமுள்ள 214 கிராம அலுவலர்  பிரிவுகளிலிருந்து 64,984 குடும்பங்களைச் சேர்ந்த 241,133 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.


இடம்பெயர்ந்தவர்கள் பாடசாலைகள்,  பொதுக்கட்டடங்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளிலும் தங்கியுள்ளனர். பாடசாலைகள் மற்றும் பொதுக்கட்டடங்களில் தங்கியுள்ளவர்களுக்கு சமைத்த உணவு வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார். 
இந்த மழை காரணமாக  மட்டக்களப்பு மாவட்டத்தில் 30,253 குடும்பங்களைச் சேர்ந்த 56,099 பேர் தங்களது வாழ்வாதாரங்களை இழந்துள்ளதாகவும் அவர் கூறினார். 


மேலும், உன்னிச்சைக்குளத்தின்  03 வான்கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளதாக  மட்டக்களப்பு மாவட்ட நீர்ப்பாசனப் பணிப்பாளர் எஸ்.மோகனராஜா தெரிவித்தார்.  நவகிரிக்குளத்தின் 02 வான்கதவுகளும் றூகரம் குளத்தின் 02 வான்கதவுகளும்; திறந்துவிடப்பட்டுள்ளன. 


இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த அடை மழையைத் தொடர்ந்து, 1,122 குடும்பங்களைச் சேர்ந்த 3,980 பேர் சனிக்கிழமை (20) இடம்பெயர்ந்ததாக அந்த மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 


இடம்பெயர்ந்தவர்கள் நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், 874 குடும்பங்களைச் சேர்ந்த 3,190 பேர் ஞாயிற்றுக்கிழமை (21) தங்களது இருப்பிடங்களுக்கு  திரும்பினர். ஏனையோர் தொடர்ந்தும் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளனர்.  இவர்களுக்கு  சமைத்த உணவு வழங்கப்படுகின்றன. 


மேலும், கந்தளாய்க்குளத்தின்  10 அவசர வான்கதவுகள்  திறந்துவிடப்பட்டுள்ளன.  வெள்ளிக்கிழமை (19) 02 அடிக்கு  திறந்துவிடப்பட்ட இந்த வான்கதவுகள்,  சனிக்கிழமை (20) மாலை 08 அடிக்கு திறந்துவிடப்பட்டன.  பின்னர்,  ஞாயிற்றுக்கிழமை (21)  05 வான்கதவுகள் 08 அடிக்கும்  05 வான்கதவுகள் 06 அடிக்கும் திறந்துவிடப்பட்டுள்ளன. 


அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, நாவிதன்வெளி, காரைதீவு, நிந்தவூர், ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை, திருக்கோவில் ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக மாவட்டச் செயலகத்தின் மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் தெரிவித்தார். 


அம்பாறை கடந்த  மூன்று நாட்களாக  அடை மழை பெய்துவந்த நிலையிலேயே மேற்படி பிரதேச செயலகப் பிரிவுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால், ஆயிரக்கணக்கான வீடுகளும் வெள்ளநீரில் மூழ்கியுள்ளதாகவும் ஞாயிற்றுக்கிழமை (21) அவர் கூறினார். 
 மீண்டும்; மழை பெய்யத் தொடங்குமானால், வெள்ளம்  அதிகரிக்கக்கூடும். எனவே,  பொதுமக்களை அவதானமாக இருக்குமாறும் மேலதிக அரசாங்க  அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .