2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

விபத்துக்களில் இருவர் உயிரிழப்பு; மூவர் காயம்

Suganthini Ratnam   / 2015 ஜூன் 24 , மு.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.எ.ஹுஸைன், ஒலுமுதீன் கியாஸ்

மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் இடம்பெற்ற வாகன  விபத்துக்களில் இருவர்  உயிரிழந்ததுடன், மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.    

மட்டக்களப்பு, குருக்கள்மடம் பகுதியில் நேற்று  செவ்வாய்க்கிழமை (23) காலை இடம்பெற்ற விபத்தில்  இருவர் காயமடைந்த இருவர் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியாவிலிருந்து திருக்கோவில் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தனியார் பஸ் வண்டியொன்று,  மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த மற்றுமொரு தனியார் பஸ் வண்டியை முந்திச்செல்ல முற்பட்டபோது இவ்விபத்து இடம்பெற்றது.

இது இவ்வாறிருக்க, திருகோணமலை மாவட்டத்தில் திங்கட்கிழமை (22) இரவு  இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில் இருவர் உயிரிழந்ததுடன், ஒருவர் காயமடைந்துள்ளார்.  

குறிஞ்சாக்கேணி - முனைச்சேனை வீதியில் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள், நிறுத்தப்பட்டிருந்த  முச்சக்கரவண்டியுடன் மோதியதால், பத்துவீட்டுத் திட்டத்தில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான  சத்து அனிபா (வயது 50)  என்பவர்  செவ்வாய்க்கிழமை (23) காலை  உயிரிழந்தார். தலையில் படுகாயமடைந்த இவர்  கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிசிச்சைக்காக மட்டக்களப்பு போதனா  வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

தோப்பூர் பட்டித்திடல் பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளொன்று, கன்டர் ரக வாகனத்துடன் மோதியதால், பாலத்தடிச்சேனையைச் சேர்ந்த க.ஜெகான் (வயது 26) என்பவர் உயிரிழந்தார். இதேவேளை, இந்த விபத்தில் படுகாயமடைந்த கு.கலாவவன் என்ற இளைஞர்; கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.
இந்த இரு இளைஞர்களும் இரவுவேளை விருந்துபசாரத்தில் கலந்துவிட்டு  வீடுகளுக்கு திரும்பிக்கொண்டிருந்தபோதே விபத்துக்குள்ளானார்கள்.

இந்த விபத்துக்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .