2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

திருகோணமலையில் 256,852 பேர் வாக்களிக்கத் தகுதி

Suganthini Ratnam   / 2015 ஜூலை 05 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில்   256,852   பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக அம்மாவட்ட உதவித் தெரிவத்தாட்சி அலுவலரும் உதவித் தேர்தல்கள் ஆணையாளருமான சஜித் வெல்கம  தெரிவித்தார்.

இந்த மாவட்டம்  மூன்று தேர்தல் தொகுதிகளை உள்ளடக்கியது.  திருகோணமலைத் தொகுதியில்  86,978 பேரும்  சேருவில தொகுதியில்  74,070  பேரும் மூதூர் தொகுதியில் 95,804  பேரும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

விகிதாசாரத் தேர்தல் முறையின் கீழ், நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த மாவட்டத்துக்காக தெரிவுசெய்யப்படவுள்ளனர். இதற்காக, ஒரு கட்சியிலிருந்தோ அல்லது சுயேட்சைக் குழுவிலிருந்தோ ஏழு வேட்பாளர்களை தேர்தலில் நிறுத்தவேண்டுமெனவும் அவர் கூறினார்.

இதேவேளை, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி  நடைபெறவுள்ள  நாடாளுமன்ற பொதுத் தேர்தல் பணிகளுக்காக அலுவலர்களை நியமிக்கும் நடவடிக்கையை திருகோணமலை தேர்தல்கள் திணைக்களம் ஆரம்பித்துள்ளதாக மாவட்ட  உதவித் தெரிவத்தாட்சி அலுவலரும் உதவித் தேர்தல்கள் ஆணையாளருமான சஜித் வெல்கம இன்று  தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்திலுள்ள அரசாங்கப் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் தொடர்பாக கணக்கெடுப்பு பெற்றுக்கொள்வதற்கு சகல அதிபர்களுக்கும் ஆளணி தொடர்பான விண்ணப்பப்படிவங்கள் தற்போது அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

இதில் தேர்தல் விசாரணை அதிகாரியின் தரவுப்படிவம், சாரம்சப்படிவம், தேர்தல் கடமைகளுக்காக விடுவிக்கப்பட முடியாத ஆசிரியர்கள் விபரம் மற்றும்  பாடசாலைகளின் கல்விசாரா ஊழியர்களின் பணியாட் தொகுதி ஆகிய படிவங்கள் அதிபர்களால் பூரணப்படுத்தி அனுப்பி வைக்கப்படவேண்டும்.

இது தவிர இம்முறை விசேடமாக ஒவ்வொரு பாடசாலைக்கும் ஒரு குறியீட்டு இலக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அக்குறியீட்டு இலக்கத்தை தேர்தல் விசாரணை அதிகாரியின் தரவுப் படிவத்தின் வலது பக்க மேல் மூலையில் தவறாது குறித்துக் காட்டப்பட வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட சகல விண்ணப்பப் படிவங்களையும் எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் திருகோணமலை தேர்தல்கள் திணைக்களத்துக்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமோ ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .