2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் மரணமடைந்ததாக வந்த குறுஞ்செய்தி தொடர்பில் முறைப்பாடு

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 18 , மு.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

குவைத் நாட்டுக்கு பணிப்பெண்ணாகச் சென்ற இளம் பெண்ணொருவர் விபத்தில் மரணமடைந்ததுடன், அவரை அடக்கம் செய்துவிட்டதாக வந்த குறுஞ்செய்தி தொடர்பில்  சேருநுவர பிரதேச செயலகத்திலும் திருகோணமலையிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திலும் இன்று திங்கட்கிழமை உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

கிளிவெட்டி, அரியமாங்கேணியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின்;; தாயான சுரேஷ்வரன் யோகவதனி (வயது 25) என்ற இப்பெண், வறுமை காரணமாக 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் திகதி குவைத்துக்கு பணிப்பெண்ணாகச் சென்றார்.
இவ்வாறிருக்கும்போது, கடந்த டிசெம்பர் மாதம் 15ஆம் திகதி கிளிவெட்டியிலுள்ள தனது சகோதரியுடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு தனது எட்டு வயதான தனது மகளின் பிறந்தநாளை கொண்டாடுமாறு கூறியுள்ளார்.

இதன் பின்னர் அவரிடமிருந்து எந்தத் தொடர்பும் இல்லாத நிலையில், இம்மாதம் 15ஆம் திகதி வேறொரு நபரின் அலைபேசியிலிருந்து ஆங்கிலமொழியில் தெளிவின்றி  யோகவதனி விபத்தில் இறந்துவிட்டதாகவும் அவர் வசம் கடவுச்சீட்டு இருந்திருக்காமையால்; சடலத்தை  குவைத்தில் அடக்கம் செய்துவிட்டதாகவும் சகல கருமங்களும் முடிந்துவிட்டதாகவும் இனிமேல் தொடர்பு கொள்ள வேண்டாமெனவும் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.  

குறுஞ்செய்தி வந்த அலைபேசியுடன் பலமுறை அழைப்புகளை மேற்கொண்டபோதும், அழைப்புகளுக்கு எதுவித பதிலும் அளிக்காமல் அலைபேசித் தொடர்பு துண்டிக்கப்படுவதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

இந்தப் பெண் முறைப்படியாக தன்னைப் பிரதேச செயலகத்தில் பதிவு செய்து, பயிற்சி முடித்து, அங்கிகரிக்கப்பட்ட முகவரினூடாக பணிப்பெண்ணாக குவைத்துக்குச் சென்றுள்ளார்.

இது தொடர்பில் மேல் நடவடிக்கைக்காக திருகோணமலையிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்துக்கு விவரம் அனுப்பப்பட்டுள்ளதுடன், அப்பெண்ணின் உறவினர்களும் நேரடியாகச் சென்றுள்ளதாக சேருநுவர பிரதேச செயலக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பிரிவின் அபிவிருத்தி உத்தியோகஸ்தர் அன்னலெட்சுமி பஞ்சாட்சரம் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .