Shanmugan Murugavel / 2016 மே 12 , பி.ப. 03:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
2020ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளை நடாத்தும் வாய்ப்பு, ஜப்பானுக்கு வழங்கப்பட்டபோது, அதற்காக ஏராளமான பணத்தை அந்நாடு வழங்கியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை, அந்நாடு மறுத்துள்ளது.
த கார்டியன் பத்திரிகை வெளியிட்ட தகவலின்படி, ஊழல்மிகுந்தவரெனக் குற்றஞ்சாட்டப்பட்ட தடகளச் சம்மேளனங்களின் சர்வதேசச் சங்கத்தின் முன்னாள் தலைவரான லமின் டியக்கின் மகனான மஸட்டா டியக்கோடு தொடர்புபட்ட சிங்கப்பூரிலுள்ள வங்கிக் கணக்கொன்றுக்கு, டோக்கியோ ஒலிம்பிக் குழுவால், பணம் செலுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. சுமார் 1.48 மில்லியன் அமெரிக்க டொலர் செலுத்தப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்துள்ள ஜப்பானின் அமைச்சரவையின் பிரதான செயலாளர் யொஷிஹிடே சுகா, இந்த வாய்ப்பைப் பெறுவதற்கான ஜப்பானின் செயற்பாடுகள், தவறின்றி இடம்பெற்றன என்பதில் நம்பிக்கையுண்டு எனத் தெரிவித்ததோடு, இவ்விடயம் தொடர்பாக அதிகாரிகளால் கேட்கப்படுமாயின், அதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு ஜப்பான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
டோக்கியோ ஏற்பாட்டுக் குழுவின் பேச்சாளரும், தங்களுக்கான வாய்ப்பு, நேர்மையாகக் கிடைத்தது என்பதில் நம்பிக்கையுள்ளதாகத் தெரிவித்தார். கருத்துத் தெரிவித்த ஜப்பானின் ஒலிம்பிக் செயற்குழுவின் பேச்சாளர் யசுஹிரோ நகமோரியும், தவறுகள் இடம்பெற்றிருக்கவில்லை எனத் தெரிவித்ததோடு, இவ்விடயம் தொடர்பாக சர்வதேச ஒலிம்பிக் செயற்குழுவால் தாங்கள் கேள்விக்குட்படுத்தப்படவில்லை எனத் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .