Shanmugan Murugavel / 2016 மே 10 , பி.ப. 02:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தான் அணியின் புதிய பயிற்றுநராக நியமிக்கப்பட்டுள்ள மிக்கி ஆர்தர், தனது அணியில், ஒழுக்கம், உடற்றகுதி, களத்தடுப்புத் திறன்கள் ஆகியவற்றில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் தென்னாபிரிக்க, அவுஸ்திரேலிய அணிகளின் பயிற்றுநராகப் பணியாற்றியிருந்த மிக்கி ஆர்தர், பாகிஸ்தான் அணியின் பயிற்றுநர் பதவியிலிருந்து வக்கார் யுனிஸின் விலகலைத் தொடர்ந்தே, புதிய பயிற்றுநராக அறிவிக்கப்பட்டிருந்தார்.
கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்குப் பெயர்போனவரான மிக்கி ஆர்தர், அவுஸ்திரேலியப் பயிற்றுநராக இருந்தபோது, இந்தியாவில் வைத்து மிற்சல் ஜோன்சன், ஷேன் வொற்சன், உஸ்மான் கவாஜா, ஜேம்ஸ் பற்றின்சன் ஆகியோர், பயிற்றுநர், அணித்தலைவர் ஆகியோரின் பணிப்புரைக்கு அமையச் செயற்படாமையைடுத்து, ஒரு போட்டியிலிருந்து விலக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையிலேயே, குழப்பங்களுக்குப் பெயர்போன பாகிஸ்தான் அணியின் பயிற்றுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்தர், 'ஒழுக்க விடயத்தில் நான் கடுமையாக இருப்பேன். அந்த முறையிலேயே, நாங்கள் சிறப்பான முடிவுகளைப் பெற முடியும். அணியிலுள்ள அனைவரும், அணிக்காக விளையாட ஆரம்பிக்க வேண்டும். சுயநலவாதியான வீரர்கள் தேவையில்லை" எனத் தெரிவித்தார்.
பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு, சிறப்பானது எனத் தெரிவித்த அவர், துடுப்பாட்டத்திலேயே முன்னேற்றம் தேவைப்படுகிறது எனத் தெரிவித்தார். அத்தோடு, களத்தடுப்பிலும் உடற்றகுதியிலும் கடுமையாக இருக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .