2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

CSK-உம் RR-உம் பணம் கட்டத்தேவையில்லை

Shanmugan Murugavel   / 2016 ஓகஸ்ட் 29 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக் தொடரிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள அணிகளான சென்னை சுப்பர் கிங்ஸ் (CSK), ராஜஸ்தான் ரோயல்ஸ் (RR) ஆகிய அணிகள், தங்களுக்கான வருடாந்தக் கட்டணத்தைச் செலுத்தத் தேவையில்லையென, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அறிவித்துள்ளது.

இதன்படி, இவ்விரு அணிகளும் 2016ஆம், 2017ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்தக் கட்டணத்தைச் செலுத்தத் தேவையில்லை என்பதோடு, 2016ஆம் ஆண்டுக்கான பணத்தை ஏற்கெனவே செலுத்தியிருந்தால், அது திரும்ப வழங்கப்படவுள்ளது.

அணிகளின் நிர்வாகிகள், சூதாட்டத்தில் பங்குபற்றியமை அல்லது அதற்கான முயற்சிகள் ஈடுபட்டமை என்ற குற்றத்தின் காரணமாக, இவ்விரு அணிகளுக்கும் தலா 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்ட போதிலும், இந்தியன் பிறீமியர் லீக் அணிகள், வருடந்தோறும் செலுத்தும் கட்டணத்தைச் செலுத்த வேண்டுமென, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அறிவித்திருந்தது.

இதற்கெதிராக, மும்பை நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையிலேயே, இவ்விவகாரத்தை நீதிமன்றத்துக்கு வெளியே முடித்துக்கொள்ள, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை இணங்கியுள்ளது.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகிகள், இவ்வாண்டுக்கான கட்டணத்தைத் தாங்கள் ஏற்கெனவே செலுத்தியுள்ளதாகவும், அது திரும்ப வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளனர். ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் நிர்வாகிகள், இவ்விடயம் தொடர்பாகக் கருத்தெதனையும் இதுவரையிலும் வெளியிட்டிருக்கவில்லை.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .