Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 10 , மு.ப. 11:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில் இந்தியாவுக்கெதிரான குழுநிலைப் போட்டியை பாகிஸ்தான் விளையாட மறுத்த 10 நாள் பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது. அந்தவகையில் கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இப்போட்டி நடைபெறவுள்ளது.
ஏனைய நாடுகள் மீதான நிதித் தாக்கத்தை சுட்டிக் காட்டி இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட சர்வதேச கிரிக்கெட் சபையின் உறுப்பினர்கள் இப்போட்டியைப் புறக்கணிக்க வேண்டாமென வலியுறுத்தியதாக பாகிஸ்தான் அரசாங்கத்தின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. இது தவிர இப்பிரச்சினை குறித்து இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடன் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் பேசியதாக இவ்வறிக்கை குறிப்பிட்டுள்ளது.
அந்தவகையில் பல மட்டங்களிலான கலந்துரையாடல்களில் எட்டப்பட்ட முடிவுகள், நட்புறவு நாடுகளின் கோரிக்கையின் அடிப்படையில் பெப்ரவரி 15, 2026 திட்டமிடப்பட்ட சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணப் போட்டியில் களமிறங்குமாறு பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணிக்கு பாகிஸ்தான் அரசாங்கம் பணிப்பதாக அறிக்கையில் தெரிவித்ததுடன், கிரிக்கெட்டின் கனவான் தன்மையைப் பாதுகாக்கும் பொருட்டு முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இதேவேளை மேலும் நியாயமான சர்வதேச கிரிக்கெட் சபையின் வருமானப் பகிர்வை தமது பேரம்பேசல்களில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை கோரியிருந்ததாகக் கூறப்பட்டபோதும் பாகிஸ்தானிய அரசாங்கமோ, சர்வதேச கிரிக்கெட் சபையோ தமது அறிக்கைகளில் எதையும் குறிப்பிட்டிருக்கவில்லை.
இந்நிலையில் இந்தியாவுடனான இருதரப்பு அல்லது முத்தரப்பு தொடருக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் கோரிக்கை சர்வதேச கிரிக்கெட் சபையால் நிராகரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .