2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

இந்தியாவுக்கு 2-1 தொடர் வெற்றி

Gopikrishna Kanagalingam   / 2015 செப்டெம்பர் 01 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, இந்திய அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை, இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. தீர்மானமிக்க மூன்றாவது போட்டியை 117 ஓட்டங்களால் வெற்றிகொண்டே, அவ்வணி இத்தொடரைக் கைப்பற்றியுள்ளது.
 

3 விக்கெட்டுகளை இழந்து 67 ஓட்டங்களுடன் 5ஆவது நாள் ஆட்டத்தைத் தொடங்கிய இலங்கை, 268 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.

ஒரு கட்டத்தில் 5 விக்கெட்டுகளை இழந்து 107 ஓட்டங்களுடன் தடுமாறியது. எனினும், அஞ்சலோ மத்தியூஸும் குசால் பெரேராவும் 135 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பகிர்ந்து, இலங்கைக்கு நம்பிக்கையை வழங்கிய போதிலும், குசால் பெரேராவும் மத்தியூஸும் விரைவில் ஆட்டமிழக்க, இலங்கை தோல்வியடைந்தது.

துடுப்பாட்டத்தில் அஞ்சலோ மத்தியூஸ் 110 ஓட்டங்களையும் குசால் பெரேரா 70 ஓட்டங்களையும் கௌஷால் சில்வா 27 ஓட்டங்களையும் பெற்றனர். வேறு எந்த வீரரும் 20க்கு மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றிருக்கவில்லை.

பந்துவீச்சில், இரவிச்சந்திரன் அஷ்வின் 4, இஷாந்த் ஷர்மா 3, உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளையும் அமித் மிஷ்ரா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 312 ஓட்டங்களைப் பெற, இலங்கை 201 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்திருந்தது. தனது இரண்டாவது இனிங்ஸில் 274 ஓட்டங்களைப் பெற்ற இந்தியா, இலங்கைக்கு 386 ஓட்டங்களை இலக்காக வழங்கியிருந்தது.

இப்போட்டியின் நாயகனாக, முதல் இனிங்ஸில் இந்தியாவுக்காக சதம் பெற்ற செற்றேஸ்வர் புஜாரா தெரிவானார்.

இத்தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை வெற்றிபெற்ற போதிலும், அடுத்த 2 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்று, இத்தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

இத்தொடரின் நாயகனாக இரவிச்சந்திரன் அஷ்வின் தெரிவானார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .