Editorial / 2026 பெப்ரவரி 06 , மு.ப. 11:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் புறக்கணிக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு இலங்கை கிரிக்கெட் சபை அவசர கடிதம் எழுதியுள்ளது. வரும் பெப்ரவரி 15ஆம் திகதி கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் டி20 உலகக்கோப்பை லீக் போட்டி நடைபெறவுள்ளது.
ஆனால், இந்தப் போட்டியில் விளையாடக் கூடாது எனப் பாகிஸ்தான் அரசு தங்கள் நாட்டு கிரிக்கெட் சபைக்கு உத்தரவிட்டுள்ளது. அரசின் இந்த முடிவால் போட்டி நடைபெறுவது சந்தேகமாகியுள்ளது. இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா, பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு ஒரு முக்கியமான கடிதத்தை அனுப்பியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், "உலகக்கோப்பைத் தொடரை நடத்த இலங்கை மிக ஆர்வமாக உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும், பாதுகாப்பு நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளன. குறிப்பாக இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டன. ரசிகர்கள் மத்தியில் இந்தப் போட்டிக்குப் பெரும் வரவேற்பு உள்ளது.
திடீரென பாகிஸ்தான் பின்வாங்கினால், அது இலங்கையின் சுற்றுலாத் துறைக்கும், பொருளாதாரத்திற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். பெரும் நஷ்டத்தைச் சந்திக்க நேரிடும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கடந்த கால நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டி பாகிஸ்தானுக்கு இலங்கை வேண்டுகோள் விடுத்துள்ளது. "கடந்த காலங்களில் பாகிஸ்தானில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்தபோது, மற்ற பெரிய நாடுகள் அங்குச் சென்று விளையாடத் தயங்கின. ஆனால், இலங்கை அணி ஆபத்தான சூழலிலும் பாகிஸ்தான் சென்று விளையாடியது. இரு நாட்டு சபைகளுக்கும் இடையிலான அந்த நட்பையும், பரஸ்பர மரியாதையையும் கருத்தில் கொண்டு, இம்முறை நீங்கள் எங்களுக்குக் கைகொடுக்க வேண்டும்" என்று அந்தக் கடிதத்தில் உருக்கமாகக் கேட்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நடைபெறும் போட்டிகளுக்கு முழுமையான பாதுகாப்பும், நடுநிலையான செயல்பாடும் இருக்கும் என்று ஷம்மி சில்வா உறுதி அளித்துள்ளார். எனவே, உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இந்தியாவுடனான போட்டியைப் புறக்கணிக்கும் முடிவைப் பாகிஸ்தான் கைவிட வேண்டும் என்று இலங்கை வலியுறுத்தியுள்ளது.
14 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
35 minute ago