2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

இலங்கைக்கு மீண்டும் தோல்வி; தொடரை வசப்படுத்தியது இந்தியா

Editorial   / 2017 ஓகஸ்ட் 27 , பி.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, இந்திய அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் 3ஆவது போட்டியிலும் வெற்றிபெற்ற இந்திய அணி, தொடரில் அசைக்க முடியாத 3-0 என்ற முன்னிலையைப் பெற்றுள்ளது.

கண்டி, பல்லேகெல மைதானத்தில், பகல் - இரவுப் போட்டியாக இடம்பெற்ற இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி, முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

2 விக்கெட்டுகளை இழந்து 28 ஓட்டங்களுடன் காணப்பட்ட அவ்வணி, அதன் பின்னர் 72 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பகிர்ந்த போதிலும், பின்னர் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து, 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 217 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

துடுப்பாட்டத்தில் லஹிரு திரிமான்ன 80 (105), டினேஷ் சந்திமால் 36 (71), மிலிந்த சிறிவர்தன 29 (27) ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில் ஜஸ்பிரிட் பும்ரா 10 ஓவர்களில் 27 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

218 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 4 விக்கெட்டுகளை இழந்து 61 ஓட்டங்களுடன் தடுமாறிய போதிலும், றோகித் ஷர்மாவும் மகேந்திரசிங் டோணியும் இணைந்து, இந்திய அணியின் வெற்றியை உறுதிசெய்தனர். அவ்வணி, 44 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 210 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது, மைதானத்தை நோக்கி வெற்றுப் போத்தல்கள் வீசப்பட்டன. இதைத் தொடர்ந்து நிறுத்திவைக்கப்பட்ட போட்டி, பின்னர் மீள ஆரம்பிக்கப்படாமல், இந்திய அணிக்கு வெற்றி வழங்கப்பட்டது.

துடுப்பாட்டத்தில் றோகித் ஷர்மா ஆட்டமிழக்காமல் 124 (143), மகேந்திரசிங் டோணி ஆட்டமிழக்காமல் 67 (86) ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில் அகில தனஞ்சய, 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

போட்டியின் நாயகனாக, ஜஸ்பிரிட் பும்ரா தெரிவானார்.

இதேவேளை, இந்தப் போட்டியில் காயமடைந்த இலங்கையின் டினேஷ் சந்திமாலுக்கு, விரலில் முறிவு ஏற்பட்டுள்ளதால், இத்தொடரில் அவர் பங்குபற்ற மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .