Shanmugan Murugavel / 2016 ஏப்ரல் 28 , மு.ப. 12:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை கிரிக்கெட் அணியின் பிரதம தேர்வாளராக சனத் ஜெயசூரிய நியமிக்கப்படுவதாக, இலங்கை கிரிக்கெட் சபை உறுதிப்படுத்தியுள்ளது. கடந்தாண்டு ஏப்ரலிலேயே தனது பதவியிலிருந்து சனத் ஜெயசூரிய விலகியிருந்த நிலையில், தற்போது அவர் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
சனத் ஜெயசூரியவைப் பிரதம தேர்வாளராக நியமிக்கும் முடிவை, இலங்கை கிரிக்கெட் சபை ஏற்கெனவே எடுத்திருந்த போதிலும், விளையாட்டமைச்சர் தயாசிறி ஜயசேகரவின் அனுமதிக்காகக் காத்திருந்தது. இந்நிலையிலேயே, அவரது அனுமதி கிடைத்துள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
ஜெயசூரிய தலைமையிலான தேர்வுக்குழுவின் பணிகள், மே 1ஆம் திகதி முதலேயே ஆரம்பிக்குமென்ற போதிலும், தற்போதுள்ள தேர்வுக்குழுவுடன் அவர் இணைந்து செயற்பட்டு வருவதாக அறிவிக்கப்படுகிறது.
ஜெயசூரியவின் தேர்வுக்குழுவில், முன்னாள் விக்கெட் காப்பாளரான ரொமேஷ் களுவிதாரண, முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான எரிக் உபஷாந்த, முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ரஞ்சித் மதுரசிங்க ஆகியோரும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதில், ஜெயசூரியவின் ஆரம்பத் துடுப்பாட்ட ஜோடியாக ரொமேஷ் களுவிதாரண திகழ்ந்தவர் என்பதோடு, எரிக் உபஷாந்த, இதற்கு முன்னைய ஜெயசூரிய தலைமையிலான தேர்வுக்குழுவில் பணியாற்றியிருந்தார். ரஞ்சித் மதுரசிங்க, தற்போதுள்ள அரவிந்த டி சில்வா தலைமையிலான தேர்வுக்குழுவில் அங்கம் வகிக்கிறார்.
இதற்கு முன்னர் தேர்வாளராக ஜெயசூரிய இருந்தபோது, அப்போதைய சிரேஷ்ட வீரர்களான மஹேல ஜெயவர்தன, குமார் சங்கக்கார ஆகியோருடன் பகிரங்கமாகவே முரண்பட்டிருந்தார். எனினும், அவர்கள் தற்போது ஓய்வுபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
6 hours ago
6 hours ago
8 hours ago
05 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
8 hours ago
05 Apr 2026