2025 மே 15, வியாழக்கிழமை

ஐ.பி.எல்: டெல்லியை வீழ்த்திய பெங்களூரு

Shanmugan Murugavel   / 2024 மே 13 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), பெங்களூருவில் நேற்றிரவு நடைபெற்ற டெல்லி கப்பிட்டல்ஸுடனான போட்டியில் றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு வென்றது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற டெல்லியின் அணித்தலைவர் அக்ஸர் பட்டேல், தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடுமென அறிவித்தார்.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூருக்காக விராட் கோலி வேகமாக ஓட்டங்களைப் பெற்ற நிலையில் அணித்தலைவர் பப் டு பிளெஸி முகேஷ் குமாரிடம் வீழ்ந்ததோடு, தொடர்ந்து 27 (13) ஓட்டங்களுடன் கோலியும் இஷாந்த் ஷர்மாவிடம் வீழ்ந்தார்.

அடுத்து வந்த ரஜாட் பட்டிடார் 52 (32), வில் ஜக்ஸ் 41 (29), கமரன் கிறீன் ஆட்டமிழக்காத 32 (24) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 187 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் ரஸிக் சலாம் 3-0-23-2, கலீல் அஹ்மட் 4-0-31-2, முகேஷ் குமார் 3-0-23-1 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.

பதிலுக்கு 188 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய டெல்லி, முதலாவது ஓவரிலேயே கலீலுக்குப் பதிலாக தாக்கம் செலுத்தும் மாற்றுவீரராகக் களமிறங்கிய டேவிட் வோணரை ஸ்வப்னில் சிங்கிடம் இழந்தது. பின்னர் மூன்றாவது ஓவரில் யஷ் தயாலிடம் அபிஷேக் பொரெல் வீழ்ந்ததோடு, அடுத்த பந்திலேயே 21 (08) ஓட்டங்களுடன் ஜேக் பிறேஸர்-மக்குர்க் ரண் அவுட்டானார். நான்காவது ஓவரில் மொஹமட் சிராஜ்ஜிடம் குமார் குஷார்கா வீழ்ந்தார்.

இதையடுத்து குறிப்பிட்ட இடைவெளியில் லொக்கி பெர்கியூசனிடம் ஷே ஹோப் வீழ்ந்ததோடு, அடுத்த ஓவரிலேயே ட்ரிஸ்டான் ஸ்டப்ஸ் ரண் அவுட்டானார். சலாம், அக்ஸர் 57 (39) ஓட்டங்களுடன், முகேஷ் குமார், குல்தீப் யாதவ் கிறீன், தயால் (2), பெர்கியூசனிடம் விழ சகல விக்கெட்டுகளையும் இழந்து 19.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 140 ஓட்டங்களையே பெற்று 47 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

இப்போட்டியின் நாயகனாக கிறீன் தெரிவானார்.

சென்னையில் நடைபெற்ற மற்றைய போட்டியில் ராஜஸ்தான் றோயல்ஸை நடப்புச் சம்பியன்களான சென்னை சுப்பர் கிங்ஸ் வென்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .