2026 ஏப்ரல் 01, புதன்கிழமை

ஓய்வுபெற்றார் ஹேரத்

Shanmugan Murugavel   / 2016 ஏப்ரல் 17 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை அணியின் முன்னணிச் சுழற்பந்துவீச்சாளரான ரங்கன ஹேரத், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலிருந்தும் இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளதாக, இலங்கை கிரிக்கெட் சபையின் செயலாளர் மொஹான் சில்வா தெரிவித்துள்ளார்.

அண்மையில் இந்தியாவில் இடம்பெற்ற உலக இருபதுக்கு-20 தொடரில் பங்கேற்றிருந்த நிலையிலேயே, 38 வயதான ரங்கன ஹேரத், மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறும் முடிவை அறிவித்துள்ளார். ரங்கன ஹேரத்தின் ஓய்வுபெறும் முடிவை ஏற்றுள்ளதாகத் தெரிவித்த மொஹான் சில்வா, டெஸ்ட் போட்டிகளில் ஹேரத் தொடர்ந்தும் விளையாடுவார் என உறுதிப்படுத்தியுள்ளார்.

71 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் பங்குபற்றிய ரஹ்கன ஹேரத், 67 இனிங்ஸ்களில் பந்துவீசி 74 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அவரது பந்துவீச்சுச் சராசரி, 31.91 என்பதோடு, சிறந்த பந்துவீச்சுப் பெறுதியாக, 20 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியமை காணப்படுகிறது. 17 இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளில் பங்குபற்றிய ரங்கன ஹேரத், ஓவருக்கு 6.13 ஓட்டங்கள் என்ற அடிப்படையில், 20.72 என்ற சராசரியில், 18 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். அவரது சிறந்த பந்துவீச்சுப் பெறுதி, 3 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகள் ஆகும்.

ஓய்வுபெறும்போது ஹேரத், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளின் பந்துவீச்சுத் தரப்படுத்தலில் 16ஆம் இடத்தில் காணப்படுகிறார். 2013ஆம் ஆண்டில் 5ஆவது இடத்தைப் பிடித்தமை, அவரது சிறந்த தரப்படுத்தல் நிலையாகும். இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளில் தரப்படுத்தலில் 33ஆவது இடத்தில் காணப்படும் அவர், உச்சபட்சமாக 32ஆவது இடத்தைப் பெற்றிருந்தார்.

ரங்கன ஹேரத்தின் ஓய்வைத் தொடர்ந்து, ஜெப்றி வன்டர்சே, சச்சித்திர சேனநாயக்க, தரிந்து கௌஷால் ஆகியோர், முக்கிய சுழற்பந்துவீச்சாளர்களாக மாறியுள்ளனர். இதில், அண்மையில் இடம்பெற்ற உலக இருபதுக்கு-20 தொடரில், ஜெப்றி வன்டர்சேயின் சிறப்பான பெறுபேறுகள், இலங்கை அணிக்கு நம்பிக்கையை வழங்குமென்பது குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .