2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

கோப்பா அமெரிக்கா: அரையிறுதியில் சிலி, ஆர்ஜென்டீனா

Shanmugan Murugavel   / 2016 ஜூன் 19 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவில் இடம்பெற்றுவரும் தென்னமரிக்க நாடுகளுக்கிடையிலான 100ஆவது கோப்பா அமெரிக்கா தொடரின் அரையிறுதிப் போட்டிகளுக்கு, சிலி, ஆர்ஜென்டீனா ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.

சிலி, மெக்ஸிக்கோ ஆகிய அணிகளுக்கிடையில் இடம்பெற்ற காலிறுதிப் போட்டியொன்றில், 6-0 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்ற சிலி அணி, அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. சிலி சார்பாக எடுவார்டோ வர்காஸ் நான்கு கோல்களையும் அலெக்சிஸ் சந்தேஸ் ஒரு கோலினையும் பெற்றனர்.

தற்போதைய கோப்பா அமெரிக்கா சம்பியன்களான சிலி அணி, தனது அரையிறுதிப் போட்டியில், புதன்கிழமை (22) காலை 6.30 மணிக்கு இடம்பெறவுள்ள போட்டியில் கொலம்பியாவைச் சந்திக்கவுள்ளது. தனது காலிறுதிப் போட்டியில், பெனால்டியில், பெருவை 4-2 என்ற கணக்கில் தோற்கடித்து, அரையிறுதிப் போட்டிக்கு கொலம்பியா தகுதி பெற்றிருந்தது.

இதேவேளை, ஆர்ஜென்டீனா, வெனிசுவேலா ஆகிய அணிகளுக்கிடையிலான மற்றைய காலிறுதிப் போட்டியில், 4-1 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்ற ஆர்ஜென்டீனா அணி, அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. இப்போட்டியில், ஆர்ஜென்டீனா சார்பாக கொன்ஸாலோ ஹியூகைன் இரண்டு கோல்களையும் லியனல் மெஸ்ஸி,  எரிக் லமேலா ஆகியோர் தலா ஒவ்வொரு கோல்களைப் பெற்றனர்.

மேற்படி போட்டியில், இரண்டு கோல்கள் பெறுவதற்கு உதவியிருந்த மெஸ்ஸி, தான், இப்போட்டியில் பெற்ற கோலின் மூலம், ஆர்ஜென்டீனா சார்பாக 54 கோல்களைப் பெற்று, அதிக கோல் பெற்றவராக திகழும் கப்ரியல் பட்டிஸ்டுடாவின் சாதனையை மெஸ்ஸி சமப்படுத்தினார்.

தனது அரையிறுதிப் போட்டியில், போட்டியை நடாத்தும் நாடான, ஐக்கிய அமெரிக்காவை, எதிர்வரும் வியாழக்கிழமை (23) அதிகாலை 5.30 மணிக்கு ஆர்ஜென்டீனா சந்திக்கிறது. தனது காலிறுதிப் போட்டியில், 2-1 என்ற கோல்கணக்கில் ஈக்குவடோரை தோற்கடித்தே, அரையிறுதிப் போட்டிக்கு அமெரிக்கா தகுதி பெற்றிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .