2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

டென்னிஸில் போட்டி நிர்ணயம்

Shanmugan Murugavel   / 2016 ஜனவரி 18 , பி.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் போட்டி நிர்ணயம் இடம்பெறுவதாக, புதியதொரு ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர் நேற்று ஆரம்பித்த நிலையில், அதற்கு முன்னர் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை காரணமாக, அதிகளவு சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன.

பி.பி.சி, பஸ்பீட் ஆகிய இரண்டு ஊடகங்கள் இணைந்து மேற்கொண்டுள்ள இந்த ஆய்வறிக்கை, தொழில்முறை டென்னிஸ் வீரர்கள் சங்கத்தையும் குற்றஞ்சாட்டியுள்ளது.
2009ஆம் ஆண்டிலிருந்து 2015ஆம் ஆண்டுவரை இடம்பெற்ற 26,000 தொழில்முறையான போட்டிகளை ஆராய்ந்தே, இந்த முடிவை, அவ்வறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

சூதாட்டத்தில், வீரரொருவர் வெல்வதற்கு வழங்கப்படும் வாய்ப்புகளில் ஏற்படும் மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு, இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதோடு அதில் 16 வீரர்கள், சந்தேகத்துக்கிடமான நடத்தை வெளிப்படுத்தியுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

தொடர் ஆரம்பிக்கும் போது, வீரரொருவரின் வெற்றி வாய்ப்புக்கு வழங்கப்படும் வாய்ப்பு, சடுதியாகக் குறைவடைந்த (10 சதவீதத்துக்கும் அதிகமாகக் குறைந்த போது) சந்தர்ப்பங்களை ஆராய்ந்த அவ்வறிக்கை, அதில சில வீரர்கள், இவ்வாறு அடிக்கடி சடுதியான குறைவை வெளிப்படுத்தியுள்ளதோடு, அவ்வாறு குறைந்த சந்தர்ப்பங்களில், அவர்கள் தோல்வியடைந்தமையையும் வெளிப்படுத்தியுள்ளது.

இவ்வாறு சந்தேகத்துக்கிடமான நபர்களில், கிரான்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒற்றையர், இரட்டையர் பிரிவுகளில் சம்பியன் பட்டம் வென்றவர்களும் உள்ளடங்குவதாகவும், நேற்று ஆரம்பித்த அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில், அவர்களில் 8 பேர், பங்குபெறவுள்ளதாகவும் அவ்வறிக்கை தெரிவிக்கிறது.

பெரிய தொடர்கள் இடம்பெறுவதற்கு முன்பதாக, வீரர்களின் ஹொட்டல் அறைகளுக்குச் செல்லும் சூதாடிகள், வீரர்களுக்கு 50,000 அமெரிக்க டொலர் அல்லது அதற்கு அதிகமான பணத்தை வழங்கி, அவர்கள் போட்டிகளில் தோற்பதை உறுதிசெய்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அது தவிர, டென்னிஸில் முறைகேடுகளைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட டென்னிஸ் நாணயப் பிரிவு, போதுமான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த தசாப்தத்தில், சந்தேகத்துக்கிடமான நடத்தைகளை வெளிப்படுத்திய 70க்கும் மேற்பட்ட வீரர்கள், எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படாமல் விடுவிக்கப்பட்டுள்ளனரெனவும், அந்த அறிக்கை குற்றஞ்சாட்டியுள்ளது.

மறைத்தமையை மறுப்பு

எனினும், தொழில்முறை டென்னிஸ் வீரர்களின் சங்கம், பெண்களுக்கான தொழில்முறை டென்னிஸ் சங்கம், சர்வதேச டென்னிஸ் சதம்மேளனம் ஆகியனவற்றைக் கொண்ட டென்னிஸ் அதிகாரசபைகள், எந்தவொரு காரணத்துக்காகவும் போட்டி நிர்ணயத்தை மறைப்பதற்குச் செயற்படவில்லை எனத் தெரிவித்துள்ளது. அத்தோடு, இந்த ஆய்வறிக்கை வெளிப்படுத்தப்பட்ட காலகட்டத்தை, துரதிர்ஷ்டவசமானது எனத் தெரிவித்துள்ளது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .