2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

தவறு செய்ததாக எண்ணவில்லை: குசால்

Shanmugan Murugavel   / 2015 டிசெம்பர் 08 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

தடை செய்யப்பட்ட மருந்துகளைப் பயன்படுத்தியதாக, சர்வதேச கிரிக்கெட் சபையின் சோதனைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர், தவறேதும் செய்ததாக எண்ணவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான தொடரின்போது, எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட தடை செய்யப்பட்ட மருந்துப்பாவனை தொடர்பான சோதனைகளின் போது, குசால் மென்டிஸ், தடைசெய்யப்பட்ட மருந்துகளைப் பயன்படுத்தியமை கண்டுபிடிக்கப்பட்டதாக, சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து, நியூசிலாந்துக்கான தொடருக்காக அங்கு சென்றிருந்த குசால், இலங்கைக்குத் திருப்பியழைக்கப்பட்டதோடு, அவருக்குப் பதிலாக கௌஷால் சில்வா அனுப்பப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த இலங்கை அணியின் இடைக்காலப் பயிற்றுநரான ஜெரோம் ஜெயரத்ன, இதுகுறித்து குசாலுடன் கலந்துரையாடியதாகவும், தவறேதும் செய்யவில்லை என அவர் தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.

காற்பாதத்தில் ஏற்பட்ட விலங்குக்கடி காரணமாக, மருந்துகளை உள்ளெடுத்ததாகவும், ஆனால், தடைசெய்யப்பட்ட எந்தவொரு மருந்தையும் உள்ளெடுத்திருக்கவில்லை என குசால் தெரிவிப்பதாகவும், ஜெரோம் தெரிவித்தார்.

வீரர்களுக்கும் அணி வைத்தியர்களுக்கும் உடற்தகுதி நிபுணர்களுக்கும், சர்வதேச கிரிக்கெட் சபையின் தடை செய்யப்பட்ட மருந்துகள் தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், பரசிற்றமோல் மாத்திரைகளை உள்ளெடுப்பதாக இருந்தாலும், அணி வைத்தியர்களிடம் அறிவிக்குமாறு வீரர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஏற்கெனவே, இலங்கையின் முதன்மை வேகப்பந்து வீச்சாளரான தம்மிக்க பிரசாத்தை இழந்துள்ள இலங்கை அணி, குசால் பெரேராவின் இழப்பைத் தொடர்ந்து, பாரிய இழப்பைச் சந்தித்துள்ளதாக, ஜெரோம் ஏற்றுக் கொண்டார்.

இவ்விடயம் தொடர்பில் குழப்பமடைந்துள்ளதாகத் தெரிவித்த அவர், குசால் பெரேராவுக்குத் தொடர்ந்தும் ஆதரவளிப்பதாகத் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்துள்ள இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன, குசால் விடயத்தில் அவசரப்பட்டு முடிவுகள் எடுக்கப்படக்கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளார். இரண்டாவது மாதிரி (பி மாதிரி) பரிசோதனைகள் நடத்தப்படவிருக்கின்றன என்பதை ஞாபகமூட்டிய அவர், அதன் பின்னரும் கூட, விளக்கமளிப்பு இடம்பெறுமென்பதைச் சுட்டிக்காட்டினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .