2026 ஏப்ரல் 01, புதன்கிழமை

நடவடிக்கைகள் எடுக்கப்படாவிடில் வேகப்பந்து வீச்சு அழிந்துவிடும்

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 01 , பி.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

வேகப்பந்து வீச்சைக் காப்பதற்கான போதிய நடவடிக்கை அதிகாரிகள் எடுக்காதுவிடின், வேகப்பந்து வீச்சு அழிந்துவிடும் ஆபத்துக் காணப்படுவதாக, முன்னணி வேகப்பந்து வீச்சாளரான தென்னாபிரிக்காவின் டேல் ஸ்டெய்ன் தெரிவித்துள்ளார். 'த கிரிக்கெட் மந்த்லி" என்ற கிரிக்கெட் சஞ்சிகைக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே, இக்கருத்துகளை அவர் வெளிப்படுத்தினார்.

'மணிக்கு 160 கிலோமீற்றர் வேகத்தில் பந்துவீசுபவர்கள் உங்களுக்கு வேண்டும். ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றுபவர்கள் வேண்டும். போட்டியின் ஐந்தாவது நாளில், மணிக்கு 150 கிலோமீற்றர் வேகத்தில் பந்துவீசுவதன் மூலம், எதிர்காலக் குழந்தைகளுக்கான ஊக்குவிப்பை வழங்கக்கூடியவர்கள் வேண்டும். என்னால் அதைச் செய்ய முடியும். ஆனால், உலக கிரிக்கெட்டை யார் நிர்வகிக்கிறார்களோ, அவர்களின் உதவி எமக்கு வேண்டும்" என்றார்.

வேகப்பந்து வீச்சாளர்களைக் காப்பதற்காக, ஆடுகளங்களும் பணமும் வளங்களும் முன்னேற்றப்பட வேண்டுமெனத் தெரிவித்த அவர், அவ்வாறு நடக்காதுவிடில், வேகப்பந்து வீச்சு இல்லாது போய்விடுமெனத் தெரிவித்தார்.

மைதானத்தை விட்டுப் பந்தை வெளியே அனுப்புவதற்கு, இந்தியன் பிறீமியர் லீக் போட்டிகளில் 2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படுமாயின், வேகமாகப் பந்துவீசுவதற்கு யார் விரும்புவார் எனக் கேள்வியெழுப்பிய அவர், அவ்வாறான தொகையை, வேகப்பந்து வீச்சாளர்கள் ஐ.பி.எல் போட்டிகளில் உழைக்க வேண்டுமெனத் தெரிவித்தார்.

ஏபி டி வில்லியர்ஸ், விராத் கோலி போன்று, துடுப்பாட்ட வீரர்களாக மாத்திரமன்றி, வேகப்பந்து வீச்சாளர்களாகவும் வருவதற்கு, குழந்தைகள் விரும்பும் நிலை ஏற்பட வேண்டுமெனத் தெரிவித்த அவர், அதற்கேற்றவாறான ஆடுகளங்கள் உருவாக்கப்பட வேண்டுமெனத் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .