2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

முரணான கருத்துகளுடன் டோணி, பிறெத்வெய்ட்

Shanmugan Murugavel   / 2016 ஓகஸ்ட் 29 , பி.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய, மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் மோதிய இரண்டாவது இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டி, மழை காரணமாகக் கைவிடப்பட்ட நிலையில், போட்டியைத் தொடர முடியாத நிலை காணப்பட்டதாக மேற்கிந்தியத் தீவுகளின் தலைவர் கிறெய்க் பிறெத்வெய்ட்டும், போட்டியை நடத்தியிருக்கலாம் என இந்தியத் தலைவர் மகேந்திரசிங் டோணியும், முரணான கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஆரம்பத்தில் தூறலாக ஆரம்பித்த மழை, பின்னர் சுமார் 15 நிமிடங்களுக்குக் கடுமையான மழையாக மாறியது. அதன் பின்னர் மழை நின்ற போதிலும், மைதானத்தின் சில பகுதிகளில் சகதி போன்ற நிலை ஏற்பட்டது. மைதானத்திலுள்ள ஈரத்தை உறிஞ்சப் பயன்படும் சுப்பர் சொப்பர் கருவிகள் அங்கு காணப்பட்டிருக்காமையால், போட்டியை மீள ஆரம்பித்திருக்க முடிந்திருக்கவில்லை.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த பிறெத்வெய்ட், மைதானத்தில் இரண்டு அல்லது மூன்று இடங்கள், பிரச்சினையான பகுதிகளாகக் காணப்பட்டதாகத் தெரிவித்ததோடு, "ஆகவே, என்னுடைய கருத்தின்படி, பாதுகாப்பற்றதாக அது காணப்பட்டது. பந்துவீச்சாளர்கள் ஓடிவரும் பகுதி சிறப்பாக இருந்தாலும், துடுப்பாட்ட வீரர் பந்தை அடித்தால், வேகமான வகையான இருபதுக்கு-20 போட்டிகளில், களத்தடுப்பாட்ட வீரர் பந்தைத் துரத்திச் சென்று ஏதாவது நடந்தால், அவரது கிரிக்கெட் வாழ்வு முடிந்துவிடும். விளையாடுவதற்கு நாங்கள் விரும்புவது மாத்திரமன்றி, வசதிகளும் சுற்றுச்சூழலும், அனைவரது கிரிக்கெட் வாழ்வுக்கும் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென எண்ணுகிறோம். ஆகவே எனது கருத்துப்படி, அவை அவ்வாறு இருக்கவில்லை, நடுவர்களும் அந்த முடிவையே எடுத்தார்கள்" என்றார்.

ஆனால் டோணியோ, போட்டியைத் தொடருமளவுக்குப் பாதுகாப்பான சூழல் இருந்ததாகத் தெரிவித்தார். தேவையான உபகரணம் இல்லாத சூழலிலும் மைதானத்தின் நிலைமை மோசமாக இருந்த காரணத்தாலும் அது மேலும் முன்னேறாது என்ற காரணத்தாலும், போட்டியை நடத்த முடியாது என நடுவர்கள் தெரிவித்தனர் எனக் குறிப்பிட்ட டோணி, "அது, போட்டி அலுவலர்கள் எடுக்க வேண்டிய முடிவு. ஆனால் என்னைப் பொறுத்தவரை, நான் 10 ஆண்டுகளுக்கு அண்மித்த அளவுக்கு சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியிருக்கிறேன், உண்மையைச் சொல்வதால், இதைவிட மோசமான நிலைமைகளில் விளையாடியிருக்கிறேன்" என்றார்.

"2011ஆம் ஆண்டை நான் ஞாபகப்படுத்தினால், இங்கிலாந்தில் நாங்கள் விளையாடிய ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடர் முழுவதையும் நாங்கள் மழைக்குள்ளேயே விளையாடினோம்" என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .