2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

மரேயைத் தோற்கடித்து சம்பியனானார் ஜோக்கோவிச்

Shanmugan Murugavel   / 2016 மே 09 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

இடம்பெற்றுவந்த மட்ரிட் பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் சம்பியன் பட்டத்தை, உலகின் முதல்நிலை வீரரான நொவக் ஜோக்கோவிச் வெற்றிகொண்டுள்ளார். உலகின் இரண்டாவது நிலை வீரராக இருந்த அன்டி மரேயைத் தோற்கடித்தே, இந்தப் பட்டத்தை அவர் வென்றார்.

களிமண் தரையில் இடம்பெற்ற இந்தப் போட்டி, இருவருக்குமே முக்கியமான போட்டியாக அமைந்தது. களிமண் தரையில் இடம்பெறும் பிரெஞ்சுப் பகிரங்க டென்னிஸ் தொடரில், நொவக் ஜோக்கோவிச் இன்னமும் பட்டம் வெல்லாத நிலையில், அதற்கான முன்னோடியாக இது அமையுமென எதிர்பார்க்கப்பட்டது. மறுபுறத்தில், முதல்நிலை வீரரை வீழ்த்துவதோடு, தனது முதலிடத்தையும் காப்பாற்ற வேண்டிய தேவை, அன்டி மரேக்கு இருந்தது.

இப்போட்டியில் ஆரம்பத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்திய ஜோக்கோவிச், 2-0 என்ற புள்ளிகள் கணக்கிலும் 5-1 என்ற புள்ளிகள் கணக்கிலும் முதலாவது செட்டில் ஆதிக்கம் செலுத்தி, இறுதியில் 6-2 என்ற புள்ளிகள் கணக்கில் முதலாவது செட்டைக் கைப்பற்றினார்.

இரண்டாவது செட்டில் ஆதிக்கம் செலுத்திய அன்டி மரே, ஒரு கட்டத்தில் 4-1 என்ற புள்ளிகள் கணக்கில் ஆதிக்கம் செலுத்தியதோடு, இறுதியில் 6-3 என்ற புள்ளிகள் கணக்கில் அந்த செட்டைக் கைப்பற்றினார்.

தீர்மானமிக்கதான மூன்றாவது செட்டில் 2-0 என்ற புள்ளிகள் கணக்கில் ஜோக்கோவிச் முன்னிலை பெற்ற போதிலும், அன்டி மரே சுதாகரித்து, 2-2 என்ற புள்ளிகள் கணக்கில் சமநிலைப்படுத்தினார். ஆனால், தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஜோக்கோவிச், 6-3 என்ற புள்ளிகள் கணக்கில் அந்த செட்டைக் கைப்பற்றியதோடு, 6-2, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் இந்தப் போட்டியில் வெற்றிபெற்று, சம்பியன் பட்டம் வென்றார்.

இதற்கு முன்னர் 2011ஆம் ஆண்டில் சம்பியன் பட்டம் வென்ற நொவக் ஜோக்கோவிச், தனது இரண்டாவது பட்டத்தைக் கைப்பற்றிக் கொண்டார்.

இந்தப் போட்டி முடிவையடுத்து, இதுவரை காலமும் இரண்டாவது இடத்தில் தரப்படுத்தப்பட்டிருந்த அன்டி மரே, மூன்றாவது இடத்துக்குப் பின்தள்ளப்பட்டதோடு, மூன்றாவது இடத்தில் காணப்பட்ட ரொஜர் பெடரர், இரண்டாவது இடத்துக்கு முன்னேறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .