Shanmugan Murugavel / 2016 ஜூன் 30 , மு.ப. 04:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய அணியின் முன்னாள் தலைவர் சௌரவ் கங்குலிக்கும் இந்திய அணியின் முன்னாள் சகலதுறை வீரரான ரவி ஷாஸ்திரிக்குமிடையிலான மோதல், பகிரங்கமாக வெடித்துள்ளது. இருவரும் ஒருவருக்கொருவர் மாறி மாறி, ஊடகங்கள் மூலமாக எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். இப்பிரச்சினை, இந்திய அணியின் பயிற்றுநர் தெரிவுக்கான நேர்முகத் தேர்வுகளைத் தொடர்ந்து ஆரம்பித்ததோடு, தற்போது, ரவி ஷாஸ்திரிக்கு தொழில் மரியாதை குறித்து கங்குலி பாடமெடுக்கும் அளவுக்கு வந்துள்ளது.
இந்திய அணியின் கிரிக்கெட் ஆலோசனைச் செயற்குழுவில், சச்சின் டெண்டுல்கர், சௌரவ் கங்குலி, வி.வி.எஸ் லக்ஷ்மன் ஆகியோர் உள்ளனர். இந்தியாவின் அடுத்த பயிற்றுநரைத் தெரிவதற்கான முக்கிய பொறுப்பு, இக்குழுவுக்கே வழங்கப்பட்டிருந்தது. அடுத்த பயிற்றுநராகும் ஆர்வத்தில், 2 ஆண்டுகளாக அணியின் பணிப்பாளராகப் பணியாற்றிய ரவி ஷாஸ்திரியும் விண்ணப்பித்திருந்தார்.
இறுதியில் அணியின் பயிற்றுநராக அணில் கும்ளே தெரிவாக, தனக்கு அந்தப் பதவி கிடைக்காமை குறித்து வருத்தம் தெரிவித்த ஷாஸ்திரி, தன்னுடைய நேர்முகத் தேர்வின்போது, ஆலோசனைக் குழுவின் உறுப்பினரொருவர் இருந்திருக்கவில்லை எனவும் அந்த நபர், தன் மீது மரியாதையின்மையை வெளிப்படுத்தியதாகவும் தனக்கு வழங்கப்பட்ட பணிக்கும் மரியாதையை வழங்கியிருக்கவில்லை எனவும், ஊடகங்கள் வாயிலாக அறிவித்தார். அந்த நேர்முகத் தேர்வில், கங்குலியே கலந்துகொண்டிருக்காத நிலையில், தற்போது பதிலடி வழங்கியுள்ளார் கங்குலி.
வங்க கிரிக்கெட் சங்கத்தின் தலைவரான கங்குலி, அச்சங்கத்தின் பணிச் செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகவே, இந்த நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளவில்லை எனத் தெரிவித்துள்ளார். அத்தோடு, ஷாஸ்திரி மீது கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்தார்.
"அவருடைய கருத்துகள், மிகவும் தனிப்பட்டனவாக அமைந்ததாக நினைக்கிறேன். இந்திய அணியின் பயிற்றுநர் பதவி அவருக்குக் கிடைக்காமைக்கு, நான் தான் காரணமென அவர் நினைப்பாராயின், முட்டாள்களின் உலகத்தில் அவர் வாழ்கிறார்" எனத் தெரிவித்தார்.
கடந்த 20 ஆண்டுகளாக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் செயற்குழுக்களில் இருந்த ஷாஸ்திரி, இவ்வாறான கருத்துகளை வெளியிட்டமை குறித்துக் கவலையடைவதாகத் தெரிவித்த கங்குலி, பயிற்றுநரைத் தெரிவுசெய்யும் இதே பொறுப்பில் ஷாஸ்திரி இருந்ததாகவும் தெரிவித்த கங்குலி, அதுகுறித்து அவர் அறிந்திருப்பதாகத் தெரியவில்லை என்றார்.
ஷாஸ்திரிக்குரிய நேர்முகத் தேர்வு, மாலை 4.15 மணிக்கு இடம்பெறவிருந்ததாகவும், 5 மணிக்கு இடம்பெறவிருந்த வங்க கிரிக்கெட் சங்கக் கூட்டத்துக்காக 5 மணிக்குச் செல்ல விரும்புவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைக்கு ஏற்கெனவே அறிவித்திருந்ததாகவும் தெரிவித்த கங்குலி, ஏனையோருக்கான நேர்முகத் தேர்வுக்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால், ஷாஸ்திரிக்கான தேர்வு, 5 மணிவரை ஆரம்பிக்கவில்லையெனவும் தெரிவித்தார்.
இதனையடுத்து, 6 மணிக்கு, கூட்டம் முடிவடைந்த பின்னர் இதனைத் தொடரலாமா எனக் கேட்க, ஆலோசனைச் செயற்குழு உறுப்பினர்களும் அவர்களோடு இணைந்து செயற்பட்ட இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைச் செயலாளரும் சம்மதித்ததாகவும், அதனால் புறப்பட்டுச் சென்றதாகவும் கங்குலி தெரிவித்தார்.
ஆனால், கூட்டத்துக்கு வந்த பின்னர், கங்குலியின்றி நேர்முகத் தேர்வை நடத்துவதற்கு ஆலோசனைச் செயற்குழு உறுப்பினர்கள் விரும்ப, அதுகுறித்துத் தன்னிடம் கேட்கப்பட்டதாகவும், அதற்குத் தான் சம்மதம் தெரிவித்ததாகவும் கங்குலி தெரிவித்தார்.
ஷாஸ்திரியின் முன்னைய ஊடகக் கருத்தில், கங்குலிக்கு ஏதாவது ஆலோசனை இருக்கிறதா எனக் கேட்கப்பட்டபோது, "அதைப் போன்ற முக்கியமானதொரு பதவிக்கு, யாராவது நேர்முகத் தேர்வுக்கு உள்ளாகும் போது, அந்தச் சந்திப்பில் கலந்துகொள்ளுங்கள்" என்பதே தனது ஆலோசனை என ஷாஸ்திரி தெரிவித்தார்.
இதற்குப் பதிலடி வழங்கிய கங்குலி, குறித்த நேர்முகத் தேர்வுக்கு நேரடியாக வராமல், ஸ்கைப் மூலமாக ஷாஸ்திரி பங்குபற்றியமையைச் சுட்டிக்காட்டினார்.
"அவருக்கும் எனது ஆலோசனையொன்று இருக்கிறது. உலகில் முக்கியமான பணிகளில் ஒன்றான இந்திய அணியின் பயிற்றுநர் பதவிக்குத் தெரிவுசெய்யப்படும் போது, செயற்குழுவுக்கு நேரடியாக முன்னாலிருந்து, தனது அளிக்கையை அவர் வழங்க வேண்டும். மாறாக, பாங்கொக்கில் விடுமுறையில் இருந்துகொண்டு, கமெராக்களின் வழியாக அன்று. குறிப்பாக, இந்தியாவில் தோன்றிய மிகச்சிறந்த வீரர்களில் ஒருவரான அணில் கும்ளே, கிட்டத்தட்ட இரண்டு மணித்தியாலங்கள் கதைத்திருந்தார்" என, கங்குலியின் பாணியில், அதிரடியான பதிலை வழங்கியுள்ளார்.
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026