2026 மே 01, வெள்ளிக்கிழமை

உணவு ஒவ்வாமையினால் 20 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதிப்பு

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 11 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சுக்ரி

காத்தான்குடி மில்லத் மகளிர் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 20  மாணவிகள் காலை உணவு ஒவ்வாமையினால் திடீரென்று சுகவீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் இன்று திங்கட்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு திடீரென சுகவீனமடைந்த மாணவிகள் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக அவ்வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர், வைத்தியர் எம்.ஆதில் தெரிவித்தார்.

இம்மாணவிகளில் 5 பேருக்கு  மயக்கம் மற்றும் வாந்தி ஏற்பட்டுள்ளதாகவும் வைத்தியர் கூறினார்.

காத்தான்குடி ஸித்தீக்கியா மகளிர் அரபுக் கல்லூரியைச் சேர்ந்த இம்மாணவிகள், இன்றையதினம் காலை ஸித்தீக்கியா அரபுக் கல்லூரியிலிருந்து காத்தான்குடி மில்லத் மகளிர் வித்தியாலயத்திற்கு வந்து கல்வி கற்றுக்கொண்டிருந்தபோதே திடீர் சுகவீனமடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஏ.எல்.எம்.றஹ்மான் தலைமையில் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி, வைத்தியர் யு.எல்.நசிர்தீன் உட்பட பொதுச்சுகாதார பரிசோதகர் குழுவினர் வைத்தியசாலைக்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அஜித் பிரசன்ன வைத்தியசாலைக்கு வந்து ஆரம்பக்கட்ட விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .