2025 மே 09, வெள்ளிக்கிழமை

'ஆசிரியர் இடமாற்றத்தை குழப்பாது ஆதரவளியுங்கள்'

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 11 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்

வாகரைப் பிரதேச மக்களின் நலன் கருதியும் பல வருடங்களாக அப்பகுதியில் கஷ்டப்படும் ஆசிரியர்களின் நலன் கருதியும் செய்யப்பட்ட ஆசிரியர் இடமாற்றங்களை குழப்பாமல் அனைத்து தரப்பினரும் ஆதரவு தர வேண்டும் என  கல்குடா வலயக் கல்விப்  பணிப்பாளர் எஸ்.ஸ்ரீகிருஸ்னராஜா தெரிவித்தார்.

கல்குடா வலயக் கல்வி அலுவலப் பிரிவில் செய்யப்பட்ட ஆசிரியர் இடமாற்றத்தில் எழுந்துள்ள பிரச்சினை தொடர்பாக ஊடகங்களுக்கு இன்று திங்கட்கிழமை விடுத்துள்ள அறிக்கையிலயே, அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், 'ஆசிரியர் பற்றாக்குறையால் பாதிக்கப்படும் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் பாடசாலை மாணவர்களின் நலன் கருதியும் சுமார் 07 தொடக்கம் 08 வருடங்களாக கஷ்டத்தில் கடமை புரியும் வெளி வலய ஆசிரியர்களின் நலன் கருதியும் என்னால்; மேற்கொள்ளப்பட்ட ஆசிரியர் இடமாற்றங்களைக் குழப்பாமல் ஆதரவு வழங்கவேண்டும்.

கல்குடா கல்வி வலயத்தில் 28,532 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். 1,711 ஆசிரியர்கள் தேவையானபோதும் 1,383 ஆசிரியர்களே உள்ளனர். 329 ஆசிரியர்கள் பற்றாக்குறையாகவுள்ளது. இதிலும் 50 வயதுக்கு மேற்பட்டோர் 31 பேர் உள்ளனர். நாளாந்தம் 100 கிலோ மீற்றருக்கு மேல் பயணம் மேற்கொள்ளும் ஆசிரியர்கள் 65 பேர் உள்ளனர். குறிப்பாக, 1,383 ஆசிரியர்களின் 411 ஆண் ஆசிரியர்கள் உள்ளனர்.

இந்ந நிலையில் வாகரை பிரதேசத்தில் உள்ள ஆசிரியர்கள் பல வருடங்களாக விரக்தியுற்றுள்ளனர் ஆனால், ஏறாவூர்ப்பற்று மற்றும் வாழைச்சேனை பிரதேசங்களில் அப்பிரதேசங்களைச் சார்ந்த 50 வயதுக்குட்பட்ட ஆசிரியர்கள் இதுவரையில் கஷ்டப் பிரதேச சேவை செய்யாத நிலை உள்ளது. இவ்வாறு 80 ஆசிரியர்கள் உள்ளனர். இவர்களில் 42 பேருக்கு மட்டுமே வாகரைப் பிரதேசங்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆசிரியர் இடமாற்றம் தொடர்பாக அரசியல் ரீதியான அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. எனவே வலயத்தின் உண்மை நிலையை மேலான கவனத்தில் எடுத்து குறிப்பாக வாகரை பிரதேச கல்வி அபிவிருத்தியையும் பல வருடங்களாக கஷ்டப்பட்ட ஆசிரியர்களின் மன நிலையையும் கருதி இந்த ஆசிரியர் இடமாற்றங்களில் தலையீடு செய்ய வேண்டாம் என்று அனைத்துத் தரப்பினரையும் வேண்டுகிறேன்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X